பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்456

மிக்கு அடங்கிய திறம் தரு வேந்தன் வெருவினால் என ஒளிக்குபு
                                   வந்து,
தொக்கு அடங்கிய எசித்து உயிர் யாவும் துகள் ஒழிப்ப அவண்
                                   எய்திய நாதன்,
திக்கு அடங்கிலும் அறாது அருள் செய்ய, செல்வன் ஆய வழி
                                   கூட்டு இலர், நாடு
புக்கு, அடங்கிய புரம் பல சேரும் புடை, வளைந்த வழி காட்டினர்
                                   வானோர்.

     திறமெல்லாம் தன்னுள் மிகுதியாக அடங்கக் கொண்டுள்ள தகுதி
வாய்ந்த மன்னனாகிய திருமகன் அஞ்சினாற் போல ஒளித்து அங்கு
வந்தான். தொகையாகக் கொண்டு அடங்கியுள்ள எசித்து நாட்டு உயிர்கள்
யாவும் கொண்ட பாவங்களை ஒழிக்க வென்று அங்கு வந்தடைந்த
அவ்வாண்டவன், நாலு திசைகள் முழுவதிலும் குறையாத அருளை
வழங்கும் பொருட்டு, அவ் வானவர் செவ்வையான நேர் வழியிலே
கூட்டிச் செல்லாமல், அந்நாட்டுள் புகுந்த பின், அதன்கண் அடங்கிய
பல நகரங்கள் வழியாகச் சென்று சேருமாறு, வளைந்த வழியைக் காட்டி
நடத்தி வந்தனர்.

               சென்ற இடமெல்லாம் சேர்ந்த நலங்கள்

      - மாங்கனி, கூவிளம், கூவிளங்காய்.

              4
விண்மேலெழு வைகறை வெங்கதிரோ
மண்மேலெரி கோடைவ ருந்துளியோ
பண்மேலுரை யோர்பனி மேலருளோ
ரெண்மேலெழ நாடவ ணெய்தினரால்.
 
விண்மேல் எழு வைகறை வெங் கதிரோ,
மண் மேல் எரி கோடை வரும் துளியோ,
பண் மேல் உரையோர், பனி மேல் அருளோர்,
எண் மேல் எழ நாடு, அவண் எய்தினர் ஆல்.

     வானத்தின் மீது விடியற்காலை எழுந்து வரும் ஞாயிறோ, எரியும்
கோடையில் மண் மீது பொழியவரும் மழையோ என்னுமாறு, வீணைக்கு
மேல் இனிய சொல்லும் பனிக்கு மேல் குளிர்ந்த அருளும் கொண்டுள்ள
அம்மூவரும், அவ்வெசித்து நாடு எண்ணுக்கு அடங்காத உயர்வு பெற்று
எழுமாறு, அங்கு வந்து சேர்ந்தனர்.