பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்471

வாரால் கட்டிய முரசு பெருகும் ஒலியை வழங்கிக் கொண்டிருக்கத் தாமும்
புகுந்தனர்.

     'வார் முரசு வளர் ஒலி வழங்க' என மாற்றிக் கூட்டுக.

               31
பால்வழி சுவையெனப் படத்தைத் தீட்டிய
கோல்வழி யழகெனக் குறையில் கேள்விசெய்
நூல்வழி புகழென நுழையன் னார்புடை
மேல்வழி வளமெலாம் விளையப் புக்கனர்.
 
பால் வழி சுவை என, படத்தைத் தீட்டிய
கோல் வழி அழகு என, குறை இல் கேள்வி செய்
நூல் வழி புகழ் என, நுழை அன்னார், புடை
மேல் வழி வளம் எலாம் நுழையப் புக்கனர்.

     அந்நகரத்துட் சென்று நுழைந்த அம்மூவரும், பாலின் இடமாகச்
சுவை தோன்றுதல் போலவும், படத்தைத் தீட்டிய சித்திரக் கோல் வழியாக
அழகு வெளிப்படுதல் போலவும், குறையற்ற கேள்வி அறிவை வளர்க்கும்
நூலின் வழியாகப் புகழ் புலப்படுதல் போலவும், மேம்பாட்டிற்கு வழியாக
அமைந்த வளமெல்லாம் தம் பக்கமாக அந்நகரத்துள் வந்து நுழையுமாறு,
தாம் அந்நகருட் புகுந்தனர்.

                   32
கொடியொடு குடைபொருங் கொள்கைத்
                         தாரிருள்
முடியொடு பொதிர்மணி முனிந்தங்
                         கீர்த்தலால்
வடிவொடு பகல்செயு மாட நீங்கியோர்
மிடியொடு குறுமனை விரும்பிப் புக்கனர்.
 
கொடியொடு குடை பொரும் கொள்கைத்து
                          ஆர் இருள்,
முடியொடு பொதிர் மணி முனிந்து அங்கு
                          ஈர்த்தலால்,
வடிவொடு பகல் செயும் மாடம் நீங்கி, ஓர்
மிடியொடு குறு மனை விரும்பிப் புக்கனர்.

     கொடிகளோடு குடைகளும் நெருங்கிப் போரிடும் தன்மையாக
அந்நகரத்து வந்து நிறைந்த இருளை அங்குள்ள மாளிகைகளின் உச்சியில்
நிறைந்துள்ள மணிகள் சினந்து அறுத்தொழித்தலால், வடிவழகோடு
பகலொளியைத் தந்து நிற்கும் மாளிகைகளையெல்லாம் விலக்கி,
வறுமையோடு பொருந்திய ஒரு சிறு மனையில் அம்மூவரும் விரும்பிக் குடி
புகுந்தனர்.