பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்482

     "மேகம் தவழும் மலைகள் தோறும், மண மலர்ச் சோலைகள்
தோறும், அழகு பொருந்திய நகரங்கள் தோறும், மற்றும் எண்ணற்கரிய
இடங்கள் தோறும் சிறப்புப் பொருந்திய கோபுர உச்சியால் உயர்ந்து
சிறந்து நின்ற என் கோவில்கள் யாவும், போர் நடைபெறும் களங்களில்
சிதறிக் கிடக்கும் புழுதி போல் தகர்ந்து கிடக்கக் கண்டேன்.

     'எண்ணவரும்' என்றிருக்க வேண்டியது 'எண்ணரும்' என வந்தது
தொகுத்தல் விகாரம்.

                    14
பொன்முகத் தொளியைத் தும்மும் பூஞ்சுதை யுருவம் பூண்ட
மின்முகத் தெறிக்குங் கற்றை விரிமணி முடியுந் தாரு
மன்முகத் தணிப்பொற் றேரு மற்றணி சிறந்த யாவுங்
கொன்முகத் தலகை யோடுங் குழைந்தழிந் தாகக் கண்டேன்.
 
"பொன் முகத்து ஒளியைத் தும்மும் பூஞ் சுதை உருவம், பூண்ட
மின் முகத்து எறிக்கும் கற்றை விரி மணி முடியும், தாரும்,
மன் முகத்து அணிப் பொன் தேரும், மற்று, அணி சிறந்த யாவும் ,
கொன் முகத்து அலகை யோடும் குழைந்து அழிந்து
                                       ஆகக் கண்டேன்.

     "பொன் மயமான ஒளியை வெளிவிடும் அழகிய சாந்தினாற் செய்த
தேவர் உருவங்களும், அவை அணிந்திருந்த, பார்ப்பவர் முகத்தில்
மின்னலை வீசும் கதிர்க் கற்றை பரவும் மணி முடிகளும், மாலைகளும்,
நிலைபெற்ற தன்மையாய் அழகு கொண்ட பொன்னாற் செய்த தேர்களும்,
மற்றும் சிறந்த அணிகலன்கள் யாவும், வீணான தன்மையாய் அவற்றிற் குடி
கொண்டிருந்த பேய்களோடும் குழைந்து அழிந்தனவாகக் கண்டேன்.

                     15
நரந்தருங் குலைவி னைந்து நாடொழிந் தோடி னாரை
வரந்தருந் தேவ ராக வணங்கவோ வென்ன யாருஞ்
சரந்தரும் பூவுஞ் சாத்தா சாந்தமும் புகையுங் காட்டா
பரந்தருங் கமழ்நீ ராட்டா பணிதலொன்
                             றினையுங் காணேன்.