பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்486

                 20
ஆயினு மன்ன யாவு மாயின வழியும் வாயு
மாயினு மறிகி லாநா னனைவரு மழைத்தல் செய்தேன்
வீயினுங் கொடிய நெஞ்சீர் விளைந்தவித் துயர்வீ யாதும்
வீயினும் புரியுந் தன்மை விளம்புதீ ரென்றான் வேந்தே.
 
"ஆயினும், அன்ன யாவும் ஆயின வழியும் வாயும்,
ஆயினும் அறிகிலா நான், அனைவரும் அழைத்தல் செய்தேன்.
வீயினும் கொடிய நெஞ்சீர், விளைந்த இத் துயர் வீயாதும்,
வீயனும், புரியும் தன்மை விளம்புதீர்" என்றான் வேந்தே.

     "அவ்வாறு இருப்பினும், முன் சொன்ன அவை யாவும் உண்டாயின
வழியும் தன்மையும் பற்றி, ஆராய்ந்து பார்த்தும் அறிய இயலாத நான்,
உங்கள் அனைவரையும் அழைத்தேன். புலியினும் கொடிய நெஞ்சம்
கொண்டோரே, விளைந்த இத்துயரம் தன்னியல்பாக அழியாதிருப்பினும்,
அழிந்ததேயாயினும், அவ்வந்நிலையில் செய்யத்தக்கது இன்னதெனச்
சொல்லுவீர்!" என்றான் பேய்க்கரசன்.

                     சிடாவியன் கூற்று

                   21
கடாவிய வசனி யன்ன கவலைகொள் ளரசை நோக்கித்
தடாவிய சரண மேத்தித் தரணியா வையுமேய்த் தேய்க்கப்
படாவியந் தரத்துள் வஞ்சம் பழுத்தகூ ரறிவின் வல்லான்
சிடாவிய னென்னுங் கூளி தீயுமிழ்ந் துரைமுன் கொண்டான்.
 
கடாவிய அசனி அன்ன கவலை கொள் அரசை நோக்கி,
தடாவிய சரணம் ஏத்தி, தரணி யாவையும் ஏய்த்து, ஏய்க்கப்
படா வியந்தரத்துள், வஞ்சம் பழுத்த கூர் அறிவின் வல்லான்,
சிடாவியன் என்னும் கூளி, தீ உமிழ்ந்து, உரை முன் கொண்டான் :

     உலகம் முழுவதையும் தாமே ஏய்த்து, தாமோ ஏய்க்கப்படாத
பேய்களுக்குள், வஞ்சகம் முதிர்ந்த கூர்மையான அறிவில் வல்லவனாகிய
சிடாவியன் என்னும் பேய், தன் நெஞ்சுள் இடியைச் செலுத்தியது போன்று