பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்492

     'நடந்தவுளி' என்பது போன்று வர வேண்டியனவெல்லாம், 'நடந்துளி'
என்பது போன்று. அடி தோறும் தொகுத்தல் விகாரம் கொண்டன. 'கார்'
நீருக்கு ஆகுபெயர்.


              31
மைத்தி றத்துயி ரேய்த்தது வன்மையோ
மெய்த்தி றத்திறை யோன்விற லேய்த்தெனக்
கைத்தி றத்துயிர் காத்திடத் தான்செயு
மைத்தி றத்துயிர்க் கேடுற வாக்கினேன்.
 
"மைத் திறத்து உயிர் ஏய்த்தது வன்மையோ?
மெய்த் திறத்து இறையோன் விறல் ஏய்த்து என,
கைத் திறத்து உயிர் காத்திட, தான் செயும்
ஐத் திறத்து, உயிர்க் கேடு உற ஆக்கினேன்.

     "பாவத்தின் வயப்பட்ட உயிர்களை இச் சிடாவியன் ஏய்த்தது
ஒரு வல்லமையோ? நானோ, மெய்யின் வயப்பட்ட ஆண்டவனின்
வல்லமையையே ஏய்த்தாற்போல, அவன் தன் கைத்திறத்தால்
உயிர்களைக் காக்கவென்று, தானே செய்யும் அழகிய திறங்களைக்
கொண்டே, அவ்வுயிர்களுக்குப் பாவமாகிய கேடு விளையுமாறு
செய்துள்ளேன்.

     தொடர்ந்து வரும் பாடல்கள், இதனை வின்றான் நிறைவேற்றிய
திறம் பேசும்.

              32
நிழன்ற சோலையெ சித்தினை நீக்கிவந்
தழன்ற கானுறி யூதர றைந்ததீத்
தழன்ற சொற்கிரை யோன்றரு மேவலாற்
சுழன்ற ராவுயிர் துய்த்தன சால்பரோ.
 
"நிழன்ற சோலை எசித்தினை நீக்கி வந்து,
அழன்ற கான் உறி, யூதர், அறைந்த தீத்
தழன்ற சொற்கு, இறையோன் தரும் ஏவலால்,
சுழன்று அரா உயிர் துய்த்தன சால்பு அரோ.

     "யூதர்கள் நிழல் படர்ந்த சோலைகள் நிறைந்த எசித்து நாட்டை
விட்டு வந்து, வெப்பமான பாலைவனத்தை அடைந்து முறையிட்டுக் கூறிய
நெருப்புப் போல் சூடான சொற்களின் காரணமாக, ஆண்டவன் இட்ட
கட்டளையால், பாம்புகள் சுழன்று வந்து உயிர்களை மிகுதியாக உண்டன.