பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்495

             37
முன்னி ருந்தனர் காலமு டிந்தபின்
பின்னி ருந்தனர் பேரெழிற் பாந்தளுக்
கென்னி ருந்தனிச் சூட்சியி னேவலான்
மன்னி ருந்தன மந்திர மாக்கினார்.
 
"முன் இருந்தனர் காலம் முடிந்த பின்,
பின் இருந்தனர், பேர் எழில் பாந்தளுக்கு,
என் இரும் தனிச் சூட்சியின் ஏவலால்,
மன் இருந்தன மந்திரம் ஆக்கினார்.

     "முன் வாழ்ந்திருந்தவர் காலம் முடிந்தபின், அவருக்குப் பின்
வாழ்ந்திருந்தவர், எனது பெரிய ஒப்பற்ற தந்திரத்தின் தூண்டுதலால், பேர்
அழகுள்ள அப்பாம்புக்கு நிலைபெற்ற கோவிலொன்றைக் கட்டினர்.

     பெருமை + எழில் - பெரு + எழில் - பேர் + எழில் = பேரெழில்

            38
மாக நாதன்வ னைந்தவை மாற்றியந்
நாக மாக்கிய நன்றிய தென்றுநா
னாக நாதனெ னும்பெயர் நாட்டிக்கே
டாக நாகத்த ருச்சனை யாயதே.
 
"மாக நாதன் வனைந்தவை மாற்றி, அந்
நாகம் ஆக்கிய நன்றி அது என்று, நான்
நாக நாதன் எனும் பெயர் நாட்டி, கேடு
ஆக, நாகத்து அருச்சனை ஆயதே.

     "வானுலக ஆண்டவன் செய்தவற்றை மறைத்து, அது அந்த நாகமே
செய்த நன்மை என்று காட்டி, அப்பாம்பிற்கு நாகநாதன் என்ற பெயரும்
நானே நாட்டினேன். இவ்வாறு, பாவமாகிய கேடு விளையுமாறு, உலகில்
நாக வழிபாடு ஏற்பட்டது.

           39
நாக நாதனை நம்பலி னாகவா
யாக மாறுமென் றாகமம் போன்றுநற்
பாக மாய்விடம் மூடிய பற்கதை
யாக மாநிலத் தர்ச்சனை நாட்டினேன்.