பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்549

                     2
வெருவெனு மதத்த யானை வெள்ளமே வளராங் காரத்
தருவெனுங் கொடிஞ்சி யோங்கச் சமைத்ததே ரிரட்டி கோபச்
செருவெனுங் கலினப் பாய்மா தேரினு மிரட்டி யாசை
யுருவெனு மெண்ணில் காலா ளுடையபேய்ப் படைக டோற்றம்.
 
வெரு எனும் மதத்த யானை வெள்ளமே, வளர் ஆங்காரத்
தரு எனும் கொடிஞ்சி ஓங்கச் சமைத்த தேர் இரட்டி, கோபச்
செரு எனும் கலினப் பாய் மா தேரினும் இரட்டி, ஆசை
உரு எனும் எண் இல் காலாள் உடைய, பேய்ப்
                                   படைகள் தோற்றம்.

     பேய்ப் படைகளின் தோற்றங்களைக் கூறுவதாயின், கண்டார்க்கு
அச்சம் தரும் இயல்புள்ள மத யானைப் படை ஒரு வெள்ளமும், வளரும்
அகந்தையின் மரம் என்னும் தேர் மொட்டை உயரமாகக் கொண்டமைந்த
தேர்ப்படை அதற்கு இரு மடங்கும், சினம் காட்டும் போர்க்கு உரிமை
என்னும் கடிவாளம் பூட்டிய குதிரைகள் தேருக்கு இரு மடங்கும்,
ஆசையின் உருவம் என்னத்தக்க எண்ணற்ற காலாட் படைகளையும்
கொண்டு அமைந்தன.

     வெள்ளம் என்பது பெருந்தொகையைக் குறிக்கும் பெயர். பாய் மா
- பாயும் விலங்கு : குதிரை.

                     3
தீய்விளை காம மம்பாய்ச் சீற்றமே வயிர வாளாய்
நோய்விளை குரோதம் வேலாய் நொறிக்கரத் துலோப மெஃகாய்
வாய்விளை பொய்நீண் கோலாய், மடிநெடுங் கதையா யேந்திப்
பேய்விளை சமரிற் கைக்கொள் பெரும்படைக் கலங்க ளன்றோ.
 
தீய் விளை காமம் அம்பாய், சீற்றமே வயிர வாளாய்,
நோய் விளை குரோதம் வேலாய், நொறிக் கரத்து உலோபம் எஃகாய்,
வாய் விளை பொய் நீண் கோலாய், மடி நெடுங் கதையாய் ஏந்தி,
பேய் விளை சமரில் கைக்கொள் பெரும் படைக் கலங்கள் அன்றோ.