பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்566

     மழைத் துளியோடு கலந்து, பெரிய மேகங்களிடையே ஓடும்
சக்கரத்தோடு திரிந்து கொண்டிருந்த தேர்களின் கூட்டத்தை, சிறகோடு
பறந்த மலைகள் என்போமோ? வலிமையோடு உலாவிய மேகங்களே
என்போமோ? விரைவோடு பாய்ந்து திரண்டு, போர் புரிதலை முன்னிட்டு,
குருதியோடு கலந்து நெருப்பும் பிறந்து எரியச் சினத்தோடு அம்பு
தொடுத்துச் செய்யும் கொடும் போரை, குற்றத்தோடு விரிந்து பரந்த
பொய்யே என்போமோ?

     திரிந்த + இரதம் - 'திரிந்த விரதம்' என வரவேண்டியது, தொகுத்தல்
விகாரமாக, 'திரிந்திரதம்' என நின்றது.

                     30
தொடையொன்றுச ரஞ்சத மொன்றிடுவார் துறுகின்றர
                             தங்கொடெ திர்ந்திரிவார்
புடைநின்றுமி டைந்துதி ரிந்தகல்வார் பொதிர்கின்றுபு ழுங்கியு
                                    டன்றெரிவா
ரிடைநின்றுசு ழன்றெவ னுந்தழலா லெரிகின்றிடி யென்றுச
                                    ரந்தொடுவார்
மிடைநின்றிர தங்கொடி ழிந்தெழுவார் மிலைகின்றுபி ரண்டுபு
                                    ரண்டுருள்வார்.
 
தொடை ஒன்று சரம் சதம் ஒன்று இடுவார்; துறுகின்று இரதம் கொடு
                                   எதிர்ந்து, இரிவார்;
புடை நின்று மிடைந்து திரிந்து, அகல்வார்; பொதிர்கின்று புழுங்கி
                                   உடன்று எரிவார்;
இடை நின்று சுழன்று எவணும் தழலால் எரிகின்று இடி என்று சரம்
                                   தொடுவார்;
மிடை நின்று இரதம் கொடு இழிந்து எழுவார்; மிலைகின்று பிரண்டு
                                   புரண்டு உருள்வார்.

     அப் பேய்ப் படையோர், தொடுப்பு ஒன்றிற்கு அம்பு ஒரு நூறு என்ற
விதமாய் ஏவுவர்; நெருங்குகின்ற தேர்களைக் கொண்டு அடுத்து வந்து, பின்
விலகிச் செல்வர்; பக்கவாட்டினின்று நெருங்கி வந்து திரிந்து, பின் அகல்வர்;
திரண்டு வந்து, பின் புழுங்கி மாறுபட்டு எரிவர்; இடையே நின்று சுழன்று
எங்கும் நெருப்பால் எரிகின்ற இடி போன்று அம்புகளைத் தொடுப்பர்;
நெருங்கி நின்று, தேர்களினின்று விழுந்து மீண்டும் எழுவர்; போரிடுகின்ற
தன்மையாய்ப் புரண்டு புரண்டு உருள்வர்.