பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்85

     'நின்றது' என ஒரு சொல் வருவித்து முடிக்கப்பட்டது. பான் - பத்து,
ஞாலம்+வயின், 'ஞாலத்து இடம்' என்ற பொருளில் மகர மெய் நிலை
பெறல் இல்லை. இது முனிவர் கொண்ட புது மரபு.


                  114
பிடிநலந் தழுவி நீந்தும் பெருங்கரி வரையென் றெண்ணி
மடிநல முயல்மான் கேழல் மரைகவி பலவு மேறிக்
கடிநலஞ் சோர்ந்து மூழ்குங் களிற்றொடு மவையு மூழ்க
வடிநல மிழந்த வாழ்க்கை யடுத்தனர் சிதைவ போன்றே.
 
"பிடி நலம் தழுவி நீந்தும் பெருங் கரி வரை என்று எண்ணி,
மடி நல முயல் மான் கேழல் மரை கவி பலவும் ஏறி,
கடி நலம் சோர்ந்து மூழ்கும் களிற்றொடும் அவையும் மூழ்க,
அடி நலம் இழந்த வாழ்க்கை அடுத்தனர் சிதைவபோன்றே.

     "தன் பெண் யானையை நன்கு தழுவிக் கொண்டு வெள்ளத்தில்
நீந்தும் பெரிய ஆண் யானையை மலையென்று தவறாக எண்ணி, தம்
வலிமை சோர்ந்த முயலும் மானும் பன்றியும் மரை மானும் குரங்கும் பிற
பல விலங்குகளும் அதன் மேல் ஏறிக்கொள்ளவே, விரைவில் தன்
வலிமை சோர்ந்து அவ் யானை மூழ்கும். அடிப்படை வலிமை இழந்தவர்
வாழ்க்கையை நம்பி அடுத்தவர் சிதைவது போன்று, மூழ்கும் அவ்
யானையோடு அவையும் மூழ்கும்.

     'மூழ்க' என்ற வினையெச்சத்தை வினை முற்றாகக்கொண்டு பொருள்
முடிவு காண்க.

                    115
பயமிகப் பகைதோன் றாது பசுவரிப் புலியின் மேலும்
மயமிகச் சிங்க மேலு மான்கலை யாளி மேலு
மயமிகச் சடுதி நீந்தி யயர்ந்துசோர்ந் துளமா யாவுங்
கயமிகப் பெருக்குண் மாண்டு கயற்கினம் விருந்துண்
                                    டாமே.
 
"பயம் மிக, பகை தோன்றாது, பசு வரிப்புலியின் மேலும்,
அயம் மிகச் சிங்க மேலும், மான்கலை யாளி மேலும்,
அயம் மிக, சடுதி நீந்தி, அயர்ந்து சோர்ந்து, உள மா யாவும்
கயம் மிகு அப் பெருக்குள் மாண்டு, கயற்கு இனம் விருந்து
                                              உண்டாமே.