பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 179

     பிற்காலத்தில் மக்களுக்கெல்லாம் அறநெறியை எடுத்துக்கூற விருக்கும்
சிறுவனாகிய ஆண்டவன், மலர் போன்ற தன் வாயைத் திறந்து முதன்
முதலாக வார்த்தை பேசியபோது, கனிவோடு சூசையைப் பார்த்து, அந்தப்
பார்வையால் தீமையின் வாய் மடங்கவும், சூசையின் காதும் வாயும்
இனிதாகக் குளிரவும், அன்று தானே அவன் மனத்தோடு அரிய உண்மைகள்
சிலவற்றை இனிதாக உணர்த்தினான்.

     குழந்தை நாதன் சூசையை அறிவுரைக்கு உடன்படுத்துதல்

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

 
              9
கள்ளுண்ட வெசித்து நாட்டிற்
     கடவுள ராக நின்று
தள்ளுண்ட பழியிற் பொங்குஞ்
     சடத்துமுன் பொருத போரி
லெள்ளுண்ட பேய்க ளந்நா
     டிழிவுறக் குணித்த யாவுந்
தெள்ளுண்ட வுணர்விற் காட்டித்
     திருமகன் சொன்னான் மீண்டே.
 
கள் உண்ட எசித்து நாட்டில் கடவுளர் ஆக நின்று,
தள்ளுண்ட பழியின் பொங்கும் சடத்து முன் பொருத போரில்
எள்ளுண்ட பேய்கள், அந் நாடு இழிவு உறக் குணித்த யாவும்
தெள் உண்ட உணர்வில் காட்டித் திருமகன் சொன்னான் மீண்டே :

     தேன் நிறைந்த எசித்து நாட்டில் பேய்கள் முன்னெல்லாம் தாமே
தெய்வங்களாக நிலவின. பின் அந்நிலையினின்று தள்ளப்பட்ட பகையின்
காரணமாகப் பொங்கிய கொடுமையோடு முன் நின்று போர் நிகழ்த்தின.