பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 620

     பூங் கொத்துக்களோ குளிர்ந்த தேனாகிய நீரோடு விரியவும், ஆறோ
மலையினின்று குளிர்ந்த நீரைக் கொண்டதாய் விழுந்து ஓடவும், மயில்களோ
காட்டில் மழை நீரின் ஈரம் கண்ட தன்மையாய் எழுந்து ஆடவும்,
அறத்தோடு கூடிய அன்பின் தன்மையராம் அம் மூவரும் துயில்
விட்டெழுந்து, வழித் தடத்தே சென்றனர்.

     ஆற்றின் வீழ்ச்சியிடையே தெறித்துச் சிதறிய நீர்த்துளிகளை
மழைத்துளியாகக் கருதி மயில்கள் ஆடின என்று கொள்க. எழுந்து என்பது
எழீஇ எனச் சொல்லிசை அளபெடையாயிற்று.

 
               10
ஆகு மாலைய கற்றிய ழற்றுமென்
றாதி மாலைய கற்றிய ளிப்படச்
சீத மாலைசெ றிந்தன மேலெலாஞ்
சீத மாலைசெ றிந்தன கீழெலாம்.
 

ஆதி மாலை அகற்றி அழற்றும் என்று,
ஆதி மாலை அகற்றி அளிப்பட,
சீத மாலை செறிந்தன மேல் எலாம்;
சீத மாலை செறிந்தன கீழ் எலாம்.


     இரவை அகற்றிக் கதிரவன் அம்மூவரையும் சுடுமென்று கருதி,
யாவற்றிற்கும் ஆதியாகிய திருமகன் அவ்வாதையை நீக்கிக் கருணை
கொள்ளவே, மேலே வானமெல்லாம் மேகங்கள் வரிசையாகத் திரண்டன;
கீழே தரையெல்லாம் குளிர்ந்த மாலை போல் மலர்கள் பூத்து நிறைந்தன.

                  பதி சேர்ந்த சிறப்பு

     - மா, கூவிளம், - விளம், - விளம், - மா

 
                       11
சுனைய நீலமுங் கமலமோ டாம்பலும் துளித்தே
னனைய நாகமு நாறிய கோங்கமு நறும்பூஞ்
சினைய சாந்தமும் செண்பக முங்கனி விருந்தாங்
கினைய யாவுமிட் டிமிழில்வந் துறைபதி யடைந்தார்.