பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 284

                  174
நாதன் மிக்குரி நலமுநன் மறையுமீங் குணர்வ
நாதன் மிக்குற வவாவிரு ளுளம்புகா வேண்டுங்
காதன் மிக்குழி கற்றவுங் கைகொடா வென்ன
வோதன் மிக்குழி யுணர்வுமிக் கனைவருந் தெளிந்தார்.
 
''நாதன் மிக்கு உரி நலமும் நல் மறையும் ஈங்கு உணர்வது
ஆதல் மிக்கு உற, அவா இருள் உளம் புகா வேண்டும்.
காதல் மிக்க உழி கற்றவும் கைகொடா'' என்ன
ஓதல் மிக்க உழி, உணர்வு மிக்கு அனைவரும் தெளிந்தார்.

     ''ஆண்டவனிடம் மிகுந்து அவனுக்கே உரியனவாக உள்ள குண
நலங்களையும் அவனைப் பற்றிக் கூறுகின்ற நல்ல வேதத்தையும் இவ்வுலகில்
கற்று உணர்வதாகிய செயல் மிகச் சிறப்பாக அமைய வேண்டுமாயின், ஆசை
என்னும் இருள் உள்ளத்தில் புகாதிருத்தல் வேண்டும். அவ்வாறு உணர்ந்த
பின்னரும், உள்ளத்தில் ஆசை மிகுந்த இடத்துத் தான் கற்றனவும் கை
கொடுத்து உதவ மாட்டா'' என்று சூசையின் உபதேசம் மிகுந்த போது,
அனைவரும் உணர்வு மிகுந்து அறிவு தெளிந்தனர்.

     மிக்குழி - மிக்க + உழி : தொகுத்தல் விகாரம்.

 
                      175
சோலை வாய்ப்பறை துவைத்தபுள் களிப்பெழீஇச் சுடர்போய்
மாலை வாயிருள் விம்மிவான் மீன்பரப் பரும்பும்
வேலை வாய்பினர் வெஃகுரை விளைகெனப் பிரிந்து
காலை வாயொளிக் கருத்தெழீஇ யனைவரும் போனார்.
 
சோலை வாய்ப் பறை துவைத்த புள் களிப்பு எழீஇ, சுடர் போய்
மாலை வாய் இருள் விம்மி, வான் மீன் பரப்பு அரும்பும்
வேலை வாய், ''பினர் வெஃகு உரை விளைக'' எனப் பிரிந்து,
காலை வாய் ஒளிக் கருத்து எழீஇ அனைவரும் போனார்.

     அச்சோலையில் இறக்கைகளை அடித்துக் கொண்ட பறவைகள்
களிப்போடு கிளைகளில் எழுந்து தங்கி, கதிரவன் மறைந்து மாலைப்
பொழுது தன் வாயிலுள்ள இருளை உமிழ, வானத்தில் விண்மீன் பரப்பு