பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 286

இருபத்தெட்டாவது
 

வாம னாட்சிப் படலம்
 

     காம வயப்பட்டுக் கருத்தழிந்து நின்ற வாமனைச் சூசை நெறிப்படுத்தி
ஆண்டு கொண்ட தன்மையைக் கூறும் பகுதி.

              ஒழுக்கம் பழக்கத்தால் அமைவது

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

 
             1
தண்டவத் தனைய பைம்பூந்
     தருத்திர ணிழற்றிக் கவ்வு
மண்டபத் தொருநாள் வைகி
     மதுநலம் பொழிவாய்க் கஞ்சம்
விண்டவத் தொழியு மாந்தர்
     வீடுறச் செப்பங் காட்டி
யொண்டவத் திறைவன் சூசை
     யுரைவிரித் திமிழிற் சொல்வான்.
 
தண் தவத்து அனைய பைம் பூந் தருத் திரள் நிழற்றிக் கவ்வும்
மண்டபத்து ஒரு நாள் வைகி, மது நலம் பொழி வாய்க் கஞ்சம்
விண்டு, அவத்து ஒழியும் மாந்தர் வீடு உறச் செப்பம் காட்டி,
ஒண் தவத்து இறைவன் சூசை உரை விரித்து இமிழின் சொல்வான்.

     ஒளி வீசுகின்ற தவத்திற்குத் தலைவனாகிய சூசை, மற்றொரு நாள்,
உள்ளத்தைக் குளிர்விக்கும் தவத்தைப் போன்று பசுமையான பூக்கள்
நிறைந்த மரக் கூட்டம் நிழல் பரப்பிச் சூழ்ந்து நிற்கும் ஒரு மண்டபத்தில்
அமர்ந்திருந்தான். தேனின் இனிமை நலம் பொழியும் தனது வாயாகிய
தாமரை மலரைத் திறந்து, வாழ்க்கையை வீணாக்கிக் கெடும் மனிதர்
வீடுபேறு அடைவதற்கான நல் வழியைக் காட்டுவதற்கான சொற்களை
இனிமையாக விரித்து உரைக்கலானான்.