பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 291

தன்மையாகக் கனிவு காட்டுவதே அல்லாமல், அந்நூல் காட்டிய
ஒழுக்கத்திற்குப் பொருந்துமாறு அஞ்சாது நடத்தலென்பது இயலாததாய்க்
காண்கின்றது" என்றான் வாமன்.

 
            8
துறைகெழு மருநூற் கேள்விச்
     சுருதியின் வடிவோன் கேட்டு
நறைகெழு மலங்கன் மார்ப
     னயப்புற முகம னோக்கி
நிறைகெழு மரிய காட்சி
     நிலைமையா லுளமுங் கண்டு
முறைகெழு வழுவா நீதி
     முகைத்தநூன் மொழிந்தான் மன்னோ.
 
துறை கெழுமு அரு நூற் கேள்விச் சுருதியின் வடிவோன் கேட்டு,
நறை கெழுமு அலங்கல் மார்பன் நயப்பு உற முகமன் நோக்கி,
நிறை கெழுமு அரிய காட்சி நிலைமையால் உளமும் கண்டு,
முறை கெழு வழுவா நீதி முகைத்த நூல் மொழிந்தான் மன்னோ:

     பல்வேறு பிரிவுகள் நிறைந்த அரிய ஒழுக்க நூலைக் கேட்டுணர்ந்த
அறிவோடு வேதவடிவாய் விளங்கிய சூசை அதனைக் கேட்டு, மணம்
நிறைந்த மாலையை அணிந்த மார்பை உடையவனாகிய வாமன் விரும்புமாறு
உபசாரத்தோடு நோக்கி, தன் மன நிறையின் பயனாக அரிய தெய்வக்
காட்சியின் மூலம் அவனது மனநிலையையும் கண்டறிந்து, முறைப்படி
அமைந்த தவறாத நீதி பொருந்திய ஒழுக்க நூலை அவனுக்கு உரைக்கத்
தொடங்கினான்:

 
          9
கற்றநூ லெளிய தோன்றிக்
     கற்குமு னரிய தன்றோ
மற்றநூல் போல வாய்ந்த
     மறைநெறி யொழுகல் வில்லாற்
பெற்றநூல் வீர வல்லோய்
     பிறந்தபோ தறிந்தாய் கொல்லோ
வுற்றநூ லுறுமுன் னீயஃ
     துணர்ந்துனக் கெளிதென் றாயோ.