பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 378

               152
அசும்பிடை யொளித்த செந்தீ
     யறவென வெடுத்தார் யூதர்
தசும்பிடை யெடுத்த நீரைச்
     சமிதைமே றெளித்து வாரி
விசும்பிடை நீங்கி வெய்யோன்
     வெங்கதிர் படத்தீப் பற்றிப்
பசும்பிடி சூழ வாட்டிப்
     படர்நெருப் பாயிற் றன்றோ.
 
"அசும்பு இடை ஓளித்த செந்தீ அறல் என எடுத்தார் யூதர்.
தசும்பு இடை எடுத்த நீரைச் சமிதை மேல் தெளித்து, வாரி
விசும்பு இடை நீங்கி வெய்யோன் வெங் கதிர் படத் தீப்பற்றி,
பசும் பிடி சூழ வாட்டி, படர் நெருப்பு ஆயிற்று அன்றோ?

     "பாழ்ங் கிணற்றில் ஒளித்து வைத்த ஆலயத்துச் செந்தீயை யூதர்
நீராகிய நிலையிற் கண்டெடுத்தனர். குடத்தில் எடுத்து வந்த அந்நீரை
விறகின்மேல் தெளித்தனர். நீர் மிகுந்த மேகத் திடையே நின்று நீங்கிப்
பகலவனின் வெப்பமான கதிர் தன்மேல் படவே" அந் நீர் தீப்பற்றி,
அருகிலுள்ள பசுமையான இலைகளையும் வாட்டி, படர்ந்து எரியும்
நெருப்பாயிற்று அன்றோ?

     யூத சமயப் பகைவர்க்கு அஞ்சி யூத குருக்கள் ஆலய நெருப்பைப்
பாழ்ங் கிணற்றில் ஒளித்து வைத்திருந்தனர். அது நீராகியதும்
நெருப்பாகியதும் பழைய ஏற்பாடு, II மக்கபேயர் 19 - 23 காண்க.

 
                 153
தண்ணுறுங் குணங்கொண் டாலுந்
     தழலுதன் குணத்தைக் காட்டி
விண்ணுறுங் கதிரொன் றுண்கால்
     வெங்கன லெரிந்த தேபோற்
கண்ணுறுங் கனலங் காமங்
     கண்டவோர் கவின்முற் காய்ந்து
புண்ணுறுங் கசடு ளாகப்
     புழுங்கிவெந் தெரியு மன்றோ.