பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 388

           7
பண்மறைத் தினிதி னீயே
     பணித்தசொன் மறுக்க லாற்றா
கண்மறைத் திருட்டு மாயைக்
     கட்டெனத் தோன்று மென்றாள்
புண்மறைத் திட்ட பாலாற்
     புண்ணற மாயை யென்றோ
வுண்மறைத் தொளித்த நன்றி
     யுறும்பயன் காட்டு மென்றான்.
 
"பண் மறைத்து இனிதின் நீயே பணித்த சொல் மறுக்கல் ஆற்றா,
கண் மறைத்து இருட்டு மாயைக் கட்டு எனத் தோன்றும்" என்றாள்.
"புண் மறைத்திட்ட பாலால் புண் அற, மாயை என்றோ?
உள் மறைத்து ஒளித்த நன்றி உறும் பயன் காட்டும்" என்றான்.

     மீண்டும் சுரமி, "இசையில் மறைத்து இனிதாகத் தோன்றுமாறு நீ
சொல்லிய சொற்கள் மறுக்க மாட்டாதனவாய், கண்ணை மறைத்து இருளச்
செய்யும் மாயக் கட்டு வித்தை போலத்தோன்றும்" என்றாள். சூசையும்
தொடர்ந்து "புண்ணை வெளியே ஆறி மறையச் செய்த தன்மையால்
உட்புண்ணும் ஆறுமாயின், அதனை மாயை என்று சொல்வாயோ? உள்ளே
மறைத்து ஒளித்து வைத்துள்ள நன்மையை அதனால் விளையும்
பயன்காட்டும்" என்றான்.

 
          8
சுனைவளர் குவளை யாதி
     சொரிமது மலர்கள் வாடி
நனைவளர் பொய்கை வற்ற
     நானின்று கனவிற் கண்டேன்
வினைவளர் நவங்கள் காட்டி
     விரித்தநின் சொல்லைக் கேட்டுப்
பனைவளர் நாடு நைந்த
     பரிசிதே யென்றாண் மூத்தாள்.