பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 461

நீங்காத தன்மையோல் ஆண்டவன் உன்னை விட்டு நீங்காமல்இனிய
நிழலை உனக்குத் தருவான். இவ்வாறு நீ இனிதாய் வாழ்வாயாக" என்று
சூசை முடித்துக் கூறினான். 'வாழ்கென்றான்' என்பது தொகுத்தல் விகாரம்.

 
                      124
படைப்பதற் கரியநற் பரிவிற் றாதையுங்
கிடைப்பதற் கரியதோர் பொருள்கி டைத்தெனா
வுடைப்பதற் கரியவின் புளத்தி லுண்டுளத்
தடைப்பதற் கரியவன் பருளைக் காட்டினான்.
 
படைப்பதற்கு அரிய நல் பரிவின், தாதையும்,
கிடைப்பதற்கு அரியது ஓர் பொருள் கிடைத்து எனா,
உடைப்பதற்கு அரிய இன்பு உளத்தில் உண்டு, உளத்து
அடைப்பதற்கு அரிய அன்பு அருளைக் காட்டினான்.

     தந்தையாகிய குண்ணனும் செய்தி தெரிந்து, பெறுவதற்கு அரிய நல்ல
அன்போடு அங்கு வந்தான். கிடைத்தற்கரிய ஒரு பொருள் கிடைத்தது
போல், அழிப்பதற்கு அரிய இன்பத்தைத் தன் உள்ளத்தில் அனுபவித்தான்.
தன் உள்ளத்தில் அடைத்து வைக்க இயலாத அன்பையும் அருளையும்
காட்டினான்.

 
                       125
கழீஇயின மணியெனக் கசடற் றாரருள்
தழீஇயின நாவகன் றயங்கி யந்நகர்க்
கெழீஇயின திருவிளக் கெனநின் றேத்தினார்
குழீஇயின நலோரெலாங் குழாங்கு ழாங்கொடே.
 
கழீஇயின மணி எனக் கசடு அற்று, ஆர் அருள்
தழீஇயின நாவகன் தயங்கி, அந் நகர்க்கு
எழீஇயின திரு விளக்கு என நின்று, ஏத்தினார்
குழீஇயின நலோர் எலாம் குழாம் குழாம் கொடே.

     கழுவப்பட்ட மணிபோல் குற்றமெல்லாம் நீங்கி, நிறைந்த தெய்வ
அருளைத் தழுவி அணைத்துக் கொண்ட நாவகன் சிறந்து விளங்கி, அந்நகர்
முழுவதற்கும் ஏற்றி வைத்த திருவிளக்குப் போல் நின்றமையால்,
நல்லோரெல்லாரும் கூட்டங் கூட்டமாகக் குழுமி வந்து அவனைப்
போற்றினர்.