பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 553

நெஞ்சோடு புண்ணியத்தை விரும்பி, மூவர் தம் அடி தொழுது அனைவரும்
பிரிவை எண்ணி அழ, வனைவதற்கு அரிய மாட்சி கொண்ட அம்மூவரும்
வாய்ந்த அம்மலையைக் கடந்து அகன்று போயினர்.

                நாசரெத்துப் பயணம்

     - விளம், - விளம், - மா, கூவிளம்

 
               146
நாவியின் னறையும்பூம் பொழிலி னாற்றமும்
வாவியின் வாசமு மல்கி வாய்தொறு
மேவியின் பெழவெதி ரெதிர்வி ருந்துசெய்
தேவியின் புறவிவ ரேகி னாரரோ.
 
நாவியின் நறையும் பூம் பொழிலின் நாற்றமும்
வாவியின் வாசமும் மல்கி, வாய் தொறும்
மேவி, இன்பு எழ எதிர் எதிர் விருந்து செய்து
ஏவி, இன்பு உற இவர் ஏகினார் அரோ.

     கத்தூரியின் மணமும் பூஞ்சோலையின் மணமும் தடாக மலர்களின்
மணமும் நிறைந்து, இடந்தோறும் பொருந்தி, இன்பத்தால் எழுச்சி கொண்டு
எதிரெல்லாம் விருந்து செய்து அம்மணத்தை ஏவி விடவே, இம்மூவரும்
இன்புற்றுச் சென்றனர்.

 
               147
தேன்விளை மலர்விழி திறந்து நோக்கிய
கான்விளை காவெலாங் களிப்ப வன்றிவர்
தான்விளை திருவெழத் தகுந்தந் நாடுறீஇ
வான்விளை மகிழ்ச்சியுண் மலியப் போயினார்.
 
தேன் விளை மலர் விழி திறந்து நோக்கிய
கான் விளை கா எலாம் களிப்ப, அன்று இவர்
தான் விளை திரு எழத் தகும் தம் நாடு உறீஇ,
வான் விளை மகிழ்ச்சி உள் மலியப் போயினார்.

     தேன் முதிர்ந்த தம் மலர்களாகிய கண்களைத் திறந்து நோக்கிய
மணம் நிறைந்த சோலைகளெல்லாம் களிப்படைய, தானாக விளையும்
செல்வங்களால் எழுச்சி கொள்ளத் தக்க சூதேயா என்னும் தம் நாட்டு
எல்லையை இம்மூவரும் அன்றே அடைந்து, வானத்தினின்று விளைந்த
மகிழ்ச்சியால் தம் உள்ளம் சிறக்கத் தொடர்ந்து சென்றனர்.