பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 568

               14
எஞ்சாத் திருவுள மிதுவென் றுளந்தேறி
மஞ்சார் வரையென மணிப்பூம் புகைக்கோயில்
துஞ்சாத் தயைமகற் றொடர்ந்து புக்குநமை
நெஞ்சா ரருளொடு நினைத்தே வேண்டினரால்.
 
எஞ்சாத் திரு உளம் இது என்று உளம் தேறி,
மஞ்சு ஆர் வரை என மணிப் பூம் புகைக் கோயில்,
துஞ்சாத் தயை மகன் தொடர்ந்து, புக்கு, நமை
நெஞ்சு ஆர் அருளொடு நினைத்தே வேண்டினர் ஆல்.

     அது கேட்ட இருவரும், இது கடவுளின் குறையற்ற திருவுளம் என்று
கண்டு மனம் தேறி, நீங்காத அன்பு கொண்ட அம்மகனைத் தொடர்ந்து,
மேகம் நிறைந்த மலை போல் அழகிய மெல்லிய புகை தவழும் திருக்
கோவிலுள் புகுந்து, தம் நெஞ்சில் நிறைந்த கருணையோடு நம்மை நினைந்து
இறைவனை வேண்டினர்.

                   மகனைப் பிரிதல்

     - விளம், - விளம், - மா, கூவிளம்.

 
                15
விரிந்தன கடற்றிரை மயங்கி வீழ்ந்தெனத்
திரிந்தன மனுத்திரள் செதித்துப் போகையி
லரிந்தன மனத்தஞ ரழுங்க வாங்கிவர்ப்
பிரிந்தன னியாண்டையும் பிரிவி லானரோ.
 
விரிந்தன கடல் திரை மயங்கி வீழ்ந்து எனத்
திரிந்தன மனுத்திரள் செதித்துப் போகையில்,
அரிந்து அன மனத்து அஞர் அழுங்க, ஆங்கு இவர்ப்
பிரிந்தனன், யாண்டையும் பிரிவு இலான் அரோ.

     பரந்த கடல் அலைகள் ஒன்றோடொன்று மயங்கி 
விழுந்தாற்போல அங்கு வழிபடச் சென்ற மனிதர் கூட்டத்தை ஊடறுத்துப்
போகையில், எவ்விடத்தும் பிரியாது தங்கியிருக்கும் இறைவனாகிய
திருமகன், அறுத்தாற் போன்ற மனத்துயரால் தாம் வருந்தும் வண்ணம்,
அங்கே இவ்விருவரையும் விட்டுப் பிரிந்தான்.

     'சேதித்து' என்ற சொல் 'செதித்து' எனக் குறுக்கல் விகாரம்
கொண்டது.