பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 58

      ''குழந்தை நாதனே, நஞ்சையே அமுதமாக்கிய தன்மைபோல,
ஒழுக்கம் இல்லாதவனாகிய எரோதன் கொண்ட பகை தங்கள் உயிரைப்
போக்கியதனால் உடல் மடிந்தவர்களாகிய இக்குழந்தைகள் ஒளியைப்
பொழிகின்ற அழகு பொருந்திய உருவத்தைப் பெற்றுக் கொண்டு
வானுலகிற்கு எழுந்து செல்ல நீயே அருள் செய்தாய்.

 
              92
தேரே ழுங்கதி ரோன்றிரி வான்றெருக்
காரெ ழுந்திருட் காலமோர் காலமோ
பேரெ ழுந்தயை பெற்றுனைச் சேர்ந்தனர்
சூரெ ழுங்கயந் துய்த்திலர் வாழ்வரே.
 
''தேர் எழுங் கதிரோன் திரி வான் தெருக்
கார் எழுந்து இருட் காலம் ஓர் காலமோ?
பேர் எழும் தயை பெற்று உனைச்சேர்ந்தனர்
சூர் எழும் கயம் துய்த்திலர் வாழ்வரே.

      'தேரில் எழுந்து வரும் கதிரவன் உலாவும் உயர்வானத்துத்
தெருக்களிற் கருமேகம் எழுந்து ஏற்படுத்தும் இருட் காலமென்று ஒரு
காலம் உண்டோ? பெரிதாக எழும் உனது தயவைப் பெற்று உன்னை
வந்தடைந் தோராகிய இக் குழந்தைகளும் அச்சந்தரும் கேடொன்றும் இனி
அனுபவியாதவராய் வாழ்வு பெறுவார்கள்.

 
             93
தணிவ ருந்தடந் தாமரை பூத்தென
மணிவ ருந்துரு மைந்தனி றங்கிநீ
பிணிவ ருந்துயிர் பேணிய பெற்றியே
பணிவ ருங்கலை யோரடை பான்மையோ.
 
''தணி வரும் தடம் தாமரை பூத்தென
மணி வருந்து உரு மைந்தன் இறங்கி நீ,
பிணி வருந்து உயிர் பேணிய பெற்றியே
பணிவு அருங் கலையோர் அடை பான்மையோ?

      ''தணிவாக உள்ள தடாகத்தில் தாமரை பூத்ததுபோல, மணிகளும்
ஒப்பாகாது வருந்தும் உருவழகு படைத்த தெய்வ மகனாகிய நீ
இம்மண்ணுலகின்று இறங்கி வந்து, துன்பத்தால் வருந்தும் உயிர்களைப்
பேணிய தன்மை எவர்க்கும் பணிய வேண்டாத கலை வல்லோரும் தம்
அறிவுத் திறத்தால் அறியத் தக்கதோ?