பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 60

''எண்ணின் மேல் எழும் சூட்சி இயற்றி நீ
விண்ணின் மேல் எழும் வீடு இட வந்து, உனை
மண்ணின் மேல் எழு மாக்கள் பகைப்பரோ,
புண்ணின் மேல் எழும் தீப்பொறி ஈட்டியே?


      ''எவர் எண்ணத்திலும் மேலாக எழுந்து நிற்கும் ஆலோசனை
புரிந்து நீ இம்மண்ணவர்க்கு விண்ணின் மேல் எழும் மோட்ச வீட்டைக்
கொடுக்க வந்திருந்தும், பொங்கி எழும் தீப்பொறிகளைப் புண்ணின் மீது
குவிப்பது போல் மண்ணின் மேல் எழுந்துள்ள இம்மக்கள் உன்னைப்
பகைப்பார்களோ?

 
                  97
மின்னைக் காட்டிய வேகத்துற் றொல்கிப்போய்க்
கொன்னைக் காட்டிய கோலம்வி ரும்பினார்
பொன்னைக் காட்டழல் போன்றரி துன்றயை
தன்னைக் காட்டினர் நோய்செயுந் தன்மையால்.
 
''மின்னைக் காட்டிய வேகத்து உற்று ஒல்கிப் போய்க்
கொன்னைக் காட்டிய கோலம் விரும்பினார்
பொன்னைக் காட்டு அழல் போன்று அரிது உன் தயை
தன்னைக் காட்டினர் நோய் செயும் தன்மையால்.

      ''மின்னலைப் போன்ற வேகத்தில் வந்து தோன்றிப் பின் அதே
வேகத்தில் ஒடுங்கிப் போய்த் தன் வீண் தன்மையைக் காட்டக் கூடிய
இவ்வுலகச் செல்வம் முதலிய கோலத்தை விரும்பிய மக்கள் உனக்குத்
துன்பம் தருகின்றனர். அதனால், பொன்னின் தன்மையைத் துலங்கக்
காட்டும் நெருப்பே போன்று, மீண்டும் உனது அரிய தயவை எடுத்துக்
காட்டியவரே ஆவார்.

      ''சுடச் சுடரும் பொன்போல ஒளிவிடும், துன்பஞ் சுடச்சுட
நோற்கிற்பவர்க்கு'' (267) என்ற குறள் கருத்து இங்கு மறைந்துள்ளது.

 
             98
கடல்வண் ணத்தமு தேகதி வாயிலே
யுடல்வண் ணத்தொளி யேயுயி ரேயுயிர்க்
கடல்வண் ணத்தளி யேயரு ளேயெனா
மடல்வண் ணத்தலர்த் தாளைவ ணங்கினார்.