பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 610

     "இவ்வாறு, எதிரிடையான சொற்கட்டுகள் பொருந்தக் கொண்டும்,
நிகழ்ந்த புதுமைகளைக் கண்டும், ஆண்டவன் மீட்டுக் காக்க உடலெடுத்துப்
பிறந்துள்ளான் என்று கொண்டால், அது அறியாமை ஆகுமோ?" என்று
பாலனாகிய திருமகன் சொன்னான். அவ்வகையால், வேதம் வல்லார்
யாவரும் வியந்து தாம் ஒருவரொருவரை நோக்கி, பின் சிறுவனை நோக்கி,
"நீ யார் மகன்? உனக்கு எந்த ஊர்? எவ்வகைக்கு உரிய குலத்தைச்
சேர்ந்தவன்?" என்று வினவினர். சிறுவனும் அதற்கு மறைபொருளாகப்
பின்வருமாறு சொன்னான்:

     'வெளிறு அதோ' என்பதனை, 'அது வெளிறோ' என்று மாற்றிக்
கூட்டுக.

 
                          93
தாதையுண் டென்னிற் றாயிலை யவனுந் தாயுள தெனினிலை
                                 யுதித்த
காதையுங் தெளிப்ப வெனக்கொரூ ரில்லை கலந்திரு குலத்துதித்
                                 தில்லை
கோதையுண் டழிந்த குலமெனக் கென்றான் கூவிடத் தின்னவ
                                 ரிலையென்
றோதையுண் டெவரும் வியப்புறீஇ நக்காங் குணர்ந்தவை
                                 யேர்ந்துபோ யினரே.
 
"தாதை உண்டு என்னில், தாய் இலை, அவனும், தாய் உளது எனில்,
                                    இலை உதித்த
காதையும் தெளிப்ப, எனக்கு ஒர் ஊர் இல்லை கலந்து இருகுலத்து
                                    உதித்து, இல்லை
கோதை உண்டு அழிந்த குலம் எனக்கு" என்றான். "கூ இடத்து
                                    இன்னவர் இலை" என்று,
ஓதை உண்டு எவரும் வியப்பு உறீஇ நக்கு, ஆங்கு உணர்ந்தவை
                                    ஓர்ந்து போயினரே.

     "எனக்குத் தந்தை உண்டு என்றால், தாய் இல்லை. அத் தந்தையும்,
தாய் உண்டு என்றால், இல்லை. பிறந்த வரலாறு கொண்டு தெளிவதாயின்,
எனக்கென்று ஓர் ஊர் இல்லை. இரண்டு குலங்களில் கலந்து
பிறந்திருப்பினும், குறைகொண்டு அழிந்த குலம் எனக்கு இல்லை" என்றான்.
"இத்தகையவர் உலகத்திலே இல்லை", என்று யாவரும் வியப்படைந்து,
ஓசையாய்ச் சிரித்து. அங்கு அவன் மூலம் உணர்ந்தவற்றை நினைந்த
வண்ணமாய் அங்கிருந்து போயினர்.