பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 615

முப்பத்திரண்டாவது
 

 
புரோகிதப் படலம்
 

     சூசையோடும் மரியாளோடும் எருசலேமினின்று நாசரேத்து செல்லும்
வழியில், எதிர்கால நிகழ்ச்சிகள்பற்றித் திருமகன் அறிவித்ததைக் கூறும்
பகுதி. எதிர்கால நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு, புரோகிதம் எனப்பட்டது.

                      வழிநடைச் சிறப்பு

     - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்

 
                    1
மேக மாலைமி டைந்துறை மேல்வரை
மேக மாலைமி டைந்தரைக் கீழுறை
நாக மாலைந டந்தென நீணகர்
நாக மாலைந டந்தகன் றாரரோ.
 
மேகம் மாலை மிடைந்து உறைமேல் வரை,
மேகம் மாலை மிடைந்து, அரைக் கீழ், உறை
நாக மாலை நடந்து என, நீள் நகர்,
நாகம் மாலை நடந்து, அகன்றார் அரோ.

     மேகங்கள் மாலையாகச் செறிந்து தங்கும் உயர்ந்த மலையின் அரைப்
பாகத்திற்குக் கீழாக, தம் மீதும் மேகங்கள் மாலையாகச் செறிந்து தங்கும்
மலைகளின் வரிசையிடையே நடந்தாற் போல வானத்தில் மாலைப் பொழுது
தோன்றுகையில் அம்மூவரும் நீண்ட எருசலேம் நகரத்தில் நடந்து அதை
விட்டகன்றனர்.

     உயர்ந்த மலை எருசலேம் கோவிலாகவும், அதன் அரைப்
பாகத்திற்குக் கீழாக அமைந்த மலைகளின் வரிசை அந்நகர மாளிகைகளின்
வரிசையாகவும் கொள்க. ஈரிடத்தும் 'மேகம்' அவற்றின் உயரம் சுட்டி
நின்றது.