பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 678

     'என்பர்' என்பது, செய்யுளோசைப் பொருட்டு, 'என்பவர்' என
விரிந்து நின்றது.

 
                  99
தாயுந் தந்தையுந் தமரெலாம் பகைசெய வென்று
மோயுந் தன்மையு மொன்றில நகைத்தடித் தகற்றி
நோயுந் துன்பமு நுகர்ந்தெமர் யாவருஞ் செம்பொன்
காயுந் தன்மையிற் கதிர்செயற் போல்வளங் கொள்வார்.
 
"தாயும் தந்தையும் தமர் எலாம் பகை செய, என்றும்
ஓயும் தன்மையும் ஒன்று இல நகைத்து அடித்து அகற்றி,
நோயும் துன்பமும் நுகர்ந்து, எமர் யாவரும், செம் பொன்
காயும் தன்மையின் கதிர் செயல் போல், வளம் கொள்வார்.

     "தாயும் தந்தையும் உறவினர் யாவரும் ஒன்றாய்ப் பகைக்கவே,
என்றும் ஓய்தல் என்பதொன்றும் இல்லாமல் நகைத்து அடித்துத்
துரத்தப்பட்டு, நோயும் துன்பமும் அனுபவித்து, செம்பொன் உலையில்
காயும் தன்மையால் ஒளிர்வது போல், எம்மவர் யாவரும் புண்ணிய வளம்
கொள்வர்.

 
                 100
கோலுங் கோடிய கோக்கண மும்பகைத் தன்ன
நூலுங் கோடரு நூலுடை யாவரு மடிய வேலுங்
கோலுமற் றடும்படை கொடுமிக வெகுண்டெப்
பாலுங் கோதிலர் குருதியோ டுயிர்நலம் பறிப்பார்.
 
"கோலும் கோடிய கோக் கணமும் பகைத்து, அன்ன
நூலும் கோடு அரும் நூல் உடை யாவரும் மடிய,
வேலும் கோலும் மற்று அடும் படை கொடு மிக வெகுண்டு எப்
பாலும் கோது இலர் குருதியோடு உயிர் நலம் பறிப்பார்.

     "தமது செங்கோலும் நீதி தவறுமாறு அரசர் கூட்டமும் பகைத்து,
அந்த வேத நூலும், தவறுவதற்கரிய அந்நூலைக் கைக் கொண்டு ஒழுகும்
யாவரும் அழியுமாறு, வேலும் அம்பும் மற்ற கருவிகளும் கொண்டு, மிகச்
சினந்து, எப்பக்கமும் குற்றமற்ற நம்மவரைக் குருதி கொட்ட உயிரையும்
நன்கு பறிப்பர்.

     'கோடிய' என்பது, 'கோட' என்ற பொருளில் வந்த 'செய்யிய' என்னும்
வாய்பாட்டு வினையெச்சம்.