பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 730

                   பாதலத்தார் புகழ்ச்சி

          - மா, தேமா, கூவிளம், தேமா, புளிமாங்காய்

 
                           53
என்றான் மென்றா தேந்திய கையா னிவையெல்லாஞ்
சென்றாங் குண்டா மாண்பினர் கேட்பத் தெளிவுண்டார்
பின்றா வன்பால் யாருமி ரங்கப் பெரிதேங்கி
நின்றா ரொன்றா யார். புகழ்மாலை நிறைசொன்னார்.
 
என்றான், மென்தாது ஏந்திய கையான், இவை எல்லாம்,
சென்று, ஆங்கு உண்டாம் மாண்பினர் கேட்பத் தெளிவு உண்டார்,
பின்றா அன்பால் யாரும் இரங்கப் பெரிது ஏங்கி நின்றார்.
ஒன்றாய் ஆர் புகழ் மாலை நிறை சொன்னார் :

     மெல்லிய மலர்க் கொடியை ஏந்திய கையனாகிய சூசை, அங்கே
சென்று இவையெல்லாம் சொன்னான். அங்கே இருந்த புண்ணிய
மாண்புடையோர் அவற்றைக் கேட்டுத் தெளிவு கொண்டனர்; குறையாத
அன்பினால் யாவரும் இரங்கிப் பெரிதும் ஏங்கி நின்றனர்; நிறைந்த புகழை
மாலையாக யாவரும் ஒன்றுகூடி நிறைவாகச் சொல்லலாயினர் :

 
                      54
தன்னே ரில்லான் றன்வய னாகித் தனிவல்லோன்
முன்னே ரில்லான் காரண னாகி முழுதொன்றாய்ப்
பின்னே ரில்லான் றான்மனு வாகிப் பெரிதேங்க
வென்னே ரானா னோவரு ணாளோ விதுவென்பார்.
 

"தன் நேர் இல்லான், தன் வயன் ஆகி, தனி வல்லோன்,
முன் நேர் இல்லான், காரணன் ஆகி, முழுது ஒன்று ஆய்,
பின் நேர் இல்லான், தான் மனு ஆகி, பெரிது ஏங்க
என் நேர் ஆனானோ! அருள் நாளோ இது!" என்பார்.


     "தனக்கு நிகர் இல்லாதவனும், தானே தன் வலிமையால்
அமைந்தவனும், ஒப்பற்ற வல்லமை உடையவனும், தனக்கு முன்னே
நிகழ்ந்தது ஒன்றும் இல்லாதவனும், எல்லாவற்றிற்கும் முதற்காரணமானவனும்,
முழுமுதலான ஒரே பொருளாய் அமைந்தவனும், தனக்குப் பின்னும் நிகர்
ஒன்றும் இல்லாதவனுமாகிய ஆண்டவன், தானே மனிதனாய் அவதரித்து