பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 773

                 72
போற்றி னானிணை போக்கிய புகழ்பொழி மாரி
தூற்றி னான்மதுத் தூற்றிய பூங்கொடி யடிமே
லேற்றி னானடி யேற்றுபு தழுவினா னாசை
யாற்றி னானரி தமரரும் வியப்பவன் பாற்றான்.
 
போற்றினான்;இணை போக்கிய புகழ் பொழி மாரி
தூற்றினான்; மதுத் தூற்றிய பூங்கொடி அடிமேல்
ஏற்றினான்; அடி ஏற்றுபு தழுவினான்; ஆசை
ஆற்றினான், அரிது அமரரும் வியப்ப, அன்பு ஆற்றான்.

     வானவரும் இக்காட்சி அரியதென்று வியக்குமாறு, அன்பு என்றும்
தணியாத சூசை, திருமகனைப் போற்றினான்; ஒப்பெல்லாம் கடந்த புகழைப்
பொழியும் சொல் மழையைப் பொழிந்தான்; தேனைத் பொழிந்த
மலர்க்கொடியை அவன் அடியில் இட்டான்; அவ்வடியைப்தன் தலைமீது
ஏற்றி வைத்துத் தழுவினான்; அவ்வாறு தன் ஆசை தணியப் பெற்றான்.

     'ஏற்றுபு' என்பது 'செய்பு' என்ற வாய்பாட்டு இறந்த கால
வினையெச்சம்.

 
                 73
கான ரும்பின கைக்கொடி யரும்பின மலர்பூத்
தேன ரும்பின செறிந்தமற் றருந்தவர் சூழ
வான ரும்பின வடிவுமீ னொத்தனர் வயங்கு
மீன ரும்பின விண்ணவர் விழாவணி விளைத்தார்.
 
கான் அரும்பின கைக்கொடி அரும்பின மலர்பூ
தேன் அரும்பின. செறிந்த மற்று அருந் தவர் சூழ,
வான் அரும்பின வடிவு மீன் ஒத்தனர். வயங்கு
மீன் அரும்பின விண்ணவர் விழா அணி விளைத்தார்.

     மணம் தோற்றுவித்த சூசையின் கைக்கொடியில் அரும்பி மலர்ந்த
பூக்கள் தேன் அரும்பி நின்றன. செறிந்து நின்ற மற்ற அரிய தவத்தோர்
சூழ நின்று, வானில் தோன்றிய விண்மீன் பரப்பினை ஒத்து விளங்கினர்.
ஒளி விளங்கும் விண்மீன்போல் தோன்றிய வானவர் விழாக்கோலம்
கொண்டார்.