பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 788

               11
நான ளித்தம னுக்குல நன்றுறக்
கோன ளித்தமு டிக்குடஞ் சூடிநீ
வான ளித்தவ ளங்கொடு வாழவின்
மீன ளித்தவி சும்புயர் வாயென்றான்.
 
"நான் அளித்த மனுக் குலம் நன்று உற,
கோன் அளித்த முடிக் குடம் சூடி நீ,
வான் அளித்த வளம் கொடு வாழ, வில்
மீன் அளித்த விசும்பு உயர் வாய்" என்றான்.

     "நான் மீட்டுக் காத்த மனித இனம் நன்மை அடையும் பொருட்டு, நீ
அரசனுக்குரிய மகுடமுடி சூடி, வானுலகுக்குரிய வளங்கொண்டு வாழுமாறு,
ஒளியுள்ள விண்மீனைக் கொண்டுள்ள வானுலகிற்கு எழுந்து வருக"
என்றான்.

     'மகுடம்' என்பது, முதற்குறையாய், 'குடம்' என நின்றது, 'முடிக்குடம்'
என்பதளை 'மகுடமுடி' என மாற்றிக் கொள்க.

 
                                 12
பொருளில் வீங்கிய தாள்வளன் போற்றலுந்
தெருளில் வீங்கிய சேனைகள் வாழ்த்தலு
மருளில் வீங்கிய வாண்டகை பால்வளன்
மருளில் வீங்கிய வையம்விட் டேறினான்.
 
பொருளில் வீங்கிய தாள் வளன் போற்றலும்,
தெருளில் வீங்கிய சேனைகள் வாழ்த்தலும்,
அருளில் வீங்கிய ஆண்டகை பால், வளன்,
மருளில் வீங்கிய வையம் விட்டு ஏறினான்.

     பொன் போல் சிறந்த திருமகனின் அடிகளைச் சூசை போற்றி
வணங்கவும், தெளிவால் சிறந்து விளங்கிய வானவர் படைகள் இருவரையும்
வாழ்த்தின. அதன்பின், சூசை, அருளில் சிறந்து விளங்கிய ஆண்டவன்
அருகே சேர்ந்து, மயக்கம் நிறைந்த இம் மண்ணுலகை விட்டு
விண்ணுலகிற்கு ஏறிச் சென்றான்.