பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 857

                    125
சார்வயிற் படாத்தயை தான மன்பரு
ளோர்வயிற் றுதித்தன நால்வ ரோர்முகத்
தேர்வயிற் கரத்தணி யெண்ணி லேந்துபு
நேர்வயிற் றென்கிழக் கிறைஞ்சி நின்றவே.
 
சார் வயின் படாத் தயை தானம் அன்பு அருள்,
ஓர் வயிற்று உதித்து அன நால்வர் ஓர் முகத்து,
ஏர் வயின் கரத்து அணி எண் இல் ஏந்துபு,
நேர் வயின் தென்கிழக்கு இறைஞ்சி நின்றவே.

     ஒரு தாய் வயிற்றிற் பிறந்து வந்தாற் போன்ற நான்கு பாவைகள்,
ஒரே தன்மையான முகங்ளோடு, தாம் சாரும் இடத்து நீங்குதல் இல்லாத
தயவும் தானமும் அன்பும் அருளுமாகிய நான்கு வரங்களையும்
தனித்தனியாகவும், அழகு இடங்கொண்ட தம் கைகளில் எண்ணில்லாத
அணிகளையும் ஏந்திக் கொண்டு, நேராகத் தென்கிழக்கில் வணங்கிய
வண்ணமாய் நின்றன.

     'நால்வர்' என்பது, நான்கு பாவைகளைக் குறித்தலின், 'நின்ற' என
அஃறிணை முடிபு கொண்டது.

 
                  126
பேர்விளை காட்சியிற் பிறந்த பாவைகள்
சீர்விளை ஞானமு நிறையுஞ் சீலமு
மேர்விளை தாயொடின் னமிர்த மேந்தியெல்
லார்விளை வுறவட கிழக்க மைந்தவே.
 
பேர் விளை காட்சியின் பிறந்த பாவைகள்,
சீர் விளை ஞானமும் நிறையும் சீலமும்,
ஏர் விளை தாயொடு, இன் அமிர்தம் ஏந்தி எல்
ஆர் விளைவு உற வட கிழக்கு அமைந்தவே.

     தம் பெயர் நிலைபெறுவதற்குக் காரணமான தெய்வக் காட்சி ன்னும்
தாய்க்குப் பிறந்த மூன்று பாவைகள், அழகு நிலைபெறுவதற்குக் காரணமான
அத்தாயோடு, சிறப்பு விளைவதற்குக் காரணமான ஞானமும் மனவடக்கமும்
ஒழுக்கமுமாகிய மூன்று வரங்களையும் இனிய அமிழ்தத்தையும் தம்
கைகளில் ஏந்திக் கொண்டு, ஒளி நிறைதலாகிய பயன் விளையுமாறு
வடகிழக்கில அமைந்து நின்றன.