தொடர்மொழி மறை 76 | நிலைமொழி மறையே வருமொழி மறையே இருமொழி மறையே எனமூ வகைமறை.
|
எ-டு: உண்ணாது வந்தான் - நிலைமொழி மறை; உண்டு வாரான் - வருமொழி மறை; ‘பள்ளியும் ஈரம் புலராமை ஏறற்க’ (ஆசார. 19) -இருமொழி மறை - எனவரும். 12 மறை பற்றிய ஒருசாரார் கருத்து 77 | விதிச்சொல் மறைப்பொருள் ஆகி வருநவும் மறைச்சொல் விதிப்பொருள் ஆகி வருநவும் விதிச்சொலின் முதல்நிலை மறைப்பொருள் பெறுநவும் மறைச்சொலின் முதல்நிலை விதிப்பொருள் பெறுநவும் உளஎன மொழிகுவர் ஒருபுடை யோரே.
|
எ-டு அழுக்காறு - பொறாமை; அழுக்காறாமை - பொறுத்தல்; உடல்படல் - மறாமை; மறுத்தல் - உடன்படாமை; ‘அறவினை யாது எனின் கொல்லாமை’ - கு. 321 ‘கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான்’ - கு. 326 - இவைபோல்வன எல்லாம் விதிச்சொல் மறைப்பொருளும், மறைச்சொல் விதிப்பொருளும் என்க. ‘உள்ளங்கையில் உரோமம் முளைத்ததாயின் அறிவிலான் அடங்குவன்’ இவற்றுள் முளைத்தது அடங்குவன் என்னும் விதி வினையினுள் முதல்நிலை பிரிந்து முளையாமையே துணிவு, அடங்காமையே துணிவு என்றே பொருள்படுதல் காண்க. இது விதிச்சொல்லின் முதல்நிலை மறைப்பொருள் பெற்றது. |