பக்கம் எண் :

106இலக்கணக் கொத்து 

எந்நூல் நோக்குதற்கும் பொதுவான கருவிகள்

8சூத்திரம் சிலசில நோக்குதற்கு அரிதேல்
முன்பின் பார்த்துப் பின்பே நோக்குக1 ;
விதிகளில் சிலசில வெளிப்படா ஆயின்,
உபலக் கணத்தினை ஓர்ந்தே உணர்க2 ;
தாம்முன் அறிந்ததற்கு ஈதுமா றாயின்
எந்நூல் விதியோ எனவே எண்ணுக3 ;
சிலநாள் பழகின் சிலவும் பலியா,
பலநாள் பழகின் பலிக்கும் என்க4 ;
விரைவால் பார்க்கின் தெரியாது ஒன்றும்,
விரையாது ஏற்கின் கருகாது என்க5 ;
வருவதில் கருத்தினை மட்டுப் படுத்தி’
வந்ததில் சிந்தையைச் சிந்தாது இறக்குக6 ;
நூலினை மீளவும் நோக்க வேண்டா,
சூத்திரம் பல்கால் பார்க்கவே துணிக7 ;
மாரிபோல் கொடுப்பினும் மந்தனைவிட்டுக்
கூரிய னுடனே கொத்தும் பழகுக8 ;
வேறுஒரு கருமத் தினைமனத்து எண்ணின்,
ஆரியன் ஆயினும் அப்பொழுது ஒழிக9 ;
சொல்பயில் விப்பவன எப்படிச் சொற்றனன்’
அப்படி ஒழுகி, அரும்பொருள் பெறுக10 .
 

இதுவும் அது! வியங்கோள் பத்தும் கருவியாகலின். ஆயின் அக் கருவியோடு சேர்க்காது பிரித்தது என்னெனின், அவை இந்நூற்கே. இவை இந்நூற்கும் எந்நூற்குமே; அன்றியும் அத்துணை நுட்பமன்று என்க.

1சூத்திரம் சிலசில நோக்குதற்கு அரிதேல்
முன்பின் பார்த்துப் பின்பே நோக்குக

சில சூத்திரவிதி கருகிற்றாயின், அப்பொழுது அழுந்தற்க. அந்நூலின் முன்பின்னாவது, தாம் முன்பே கண்ட நூற்கண்ணாவது, பின்பு கற்கும் நூற்கண்ணாவது அவ்விதி வெளிறிக் கிடக்கும். அதுகண்டு தெளிந்து பின்பு அழுந்துக.