கருத்தா - கருத்தன், ஏதுக்கருத்தன், கருவிக்கருத்தன், கருமக்கருத்தன் என நால்வகைப்படும் - என்னும் இறையனார் அகப்பொருள் உரை. காரணக் கருத்தா, தான்தெரி கருத்தா, தான்தெரியாக் கருத்தா, கருமக் கருத்தா, தலைமைக் கருத்தா எனக் கருத்தா என்னும் வினைமுதல் ஐவகைப்படும் என்று வீரசோழியம் (41) கூறும். எனவே, வினைமுதல் வகைகள் 4, 5, 6, 7, என இலக்கண ஆசிரியர்களிடை கருத்து வேறுபாடுண்மை காண்க.] எ-டு: ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்’ -கு. 193 “‘பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும் - வரிசையால் வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே தானே சிறியார் தொடர்பு’ - நாலடி. 125 என்பனவற்றும், ‘இன்னா தாமே வரும்’ ‘கேண்மை தானே நந்தும்’ ‘தொடர்பு தானே தேயும்’ எனச் செயப்படுபொருள் தேற்றத்தொடு வினைமுதலாய்ச் செயப்படுபொருள் குன்றிய வினை கொண்டது. திண்ணை மெழுகிற்று எனச் செயப்படுபொருள் தேற்றமின்றி வினைமுதலாய்ச் செயப்படுபொருள் குன்றாத வினை கொண்டது. இவ்விருவகையும் வடமொழி விதியாகலின் விரிக்கின் பெருகும். ஆதித்தன் கல் தீப்பிறப்பித்தான். காற்றுப் பழம் உதிர்த்தது. - இவை ஏதுக் கருத்தா. சாத்தான் உண்டான். - இது தன் வசக் கருத்தா. |