பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1271

(வி - ம்.) விருத்தர் - முதியோர். வெஃகுதல் - விரும்புதல். புரை - குற்றம். சரித்தல் - இயங்கல்.

(29)

 சிறக்குமண் ணவர்க்கெலாந் தெய்வ லோகமாய்த்
 துறக்கமுள் ளவர்க்குமேற் றுறக்க நாடதாய்ப்
 பிறக்கமுற் றிடப்பெரு வளத்த தாக்கினான்
 அறக்குணத் தவர்பயி லடுக்கன் முற்றுமே.

(இ - ள்.) அறப் பண்புடையோரே மிக்கு வாழ்கின்ற அத்திருத்தணிகை மலை முழுதும், சிறப்புடைய இந்நிலவுலகத்தவர்க்கெல்லாம் தேவருலக மாகவும், அத்தேவருலகத்தவர்க்கெல்லாம் சிவலோகமாகவும், விளங்கும்படி பெரிய வளமுடையதாகச் செய்தமைத்தான்.

(வி - ம்.) வானவரும் மண்ணுலகிற் றோன்றியே வீடு பேறடைதல் கருதிச் சிறக்கும் மண் என்றார். தணிகைமலை யுண்மையாற் சிறக்குமண் என்றார் எனினுமாம். மேற்றுறக்கம் என்றது சிவலோகத்தை.

(30)

 நீடிய பெருங்கவி னேர்கண் டாரெனின்
 வீடெனப் படுவது வேண்டற் பாலதோ
 பீடுறு பெருந்தவத் தார்க்கு மிங்கெனக்
 கோடுயர் வரையெலாங் கோடித் தானரோ.

(இ - ள்.) அழிவற்ற பேரழகு என்பதனைக் காட்சியளவையானே கண்கூடாக நேரிற் கண்டார் ஆதலின், அத்தகைய பேறு பெற்ற பெருமையுறுகின்ற பெரிய தவத்தினை யுடையோர்க்கும் இவ்வுலகின் கண் உவமை என்பது ஒன்று கூறுதல் வேண்டாவன்றோ. இவ்வண்ணமாகக் குவடுயர்ந்த அத்திருத்தணிகை மலையை அணி செய்தனன்.

(வி - ம்.) தவம் இத்தகைய பேற்றினை யளித்தலின் தவமுடை யோர்க்கு உவமையில்லை என்றவாறு.

(31)

வேறு

 வியவர்கள் விரைந்து சென்று விமலனா ரருளீ தென்ன
 இயவருட் டலைமை பூண்டோ னினியன நுகர்ந்து பூசிப்
 புயலுமிழ் மின்னு வீசும் பொலங்கல னணிந்து போற்றி
 நயனுறு கருவி யெல்லா நயத்தக வமைத்துக் கொண்டு.

(இ - ள்.) ஏவலர்கள் விரைந்து சென்று இறைவனுடைய திருவருட் பணி இஃதென்று கூறுதலானே இசைவாணருட்டலைவனானவன், இனிமையுடைய உணவினையுண்டும், இனிமைமிக்க நறுமணப் பொருள்களைப் பூசிக்கொண்டும், முகில் விடுகின்ற மின்னல் போன்று ஒளிவிடும் பொன்னணிகலன்களை அணிந்துகொண்டும், பேணி, நயமுடைய இசைக்கருவிகளையெல்லாம் நன்மையுண்டாக அமைத்துக் கொண்டும்.

(வி - ம்.) வியவர் - ஏவலர். இயவர் - இசைக்கருவியாளர்.

(32)