பக்கம் எண் :

1274தணிகைப் புராணம்

வேறு

 முரச மார்த்தலு மூரி நகர்த்தலை
 அரச வீதியு மாவண முந்தலை
 விரசு ஞெள்ளலும் வேறிடம் யாங்கணும்
 பரசி யாரும் பணிசெய முன்னினார்.

(இ - ள்.) இவ்வாறு முரசம் முழங்கியவளவிலே அப்பெருமை யுடைய திருத்தணிகையின்கண் அரச வீதிகளினும் அங்காடித் தெருக்களினும் தலைமை பெற்ற பிற தெருக்களினும் பிறவிடங்களினும் ஆக யாண்டும் பிறராற் புகழப்படுந் தகுதியுடைய எல்லோரும் தொண்டு செய்யத் தொடங்கினர்.

(வி - ம்.) மூரி - பெருமை. ஆவணம் - அங்காடி. தலை - இடமுமாம். ஞெள்ளல் - தெரு.

(39)

 பழைய மாடமும் பைம்பொற் பதணமும்
 மழைது ழாயெழும் வண்மணிப் பந்தரும்
 தழையு மோவியச் சாலையுஞ் சீத்தொரீஇ
 விழைய வேறுவிண் ணோங்க விழைத்தனர்.

(இ - ள்.) பழையனவாகிய மாடங்களையும் பசிய பொற் பதணங்களையும் முகில் உராய்ந்து போதற்குக் காரணமான வளவிய மணிகளாலியன்ற பந்தர்களையும் மிக்க ஓவியங்களையுடைய மண்டபங்களையும் துரால் நீக்கி விண்ணில் ஓங்கும்படி புதுக்கிக் கண்டோர் விரும்பும்படி ஒப்பனை செய்தனர்.

(வி - ம்.) பதணம் - ஒருமதிலுறுப்பு. தழைப்பந்தர் எனினுமாம்.

(40)

 செப்பு நேர்முலை யார்முன்னர்ச் சிந்திய
 ஒப்பி றாம மொளிர்மணிச் சாந்தெனும்
 குப்பை வாரவிற் கொண்டதம் மெய்யணி
 குப்பை யாகலிற் குப்பைக ளைந்திலார்.

(இ - ள்.) பொற் செப்பினை ஒத்த முலையினையுடைய மகளிர் துரால்களையுங்கால் அந்நகரின்கண் தாம் ஊடற் பொழுதில் வெறுத்து நீத்த ஒப்பற்ற மாலைகளும் ஒளிக்கின்ற மணிகளும் சாந்தமும் ஆகிய ஒளியுடைய தம் உடலணிகலன்களே துராலாதலைக் கண்டு அவற்றைக் களைந்திலர்.

(வி - ம்.) அந்நகரத்தே பிற துரால்கள் இல்லை என்றவாறு.

(41)

 வீற்றுப் பந்தின் விரைப்புனன் மின்னனார்
 ஏற்றுத் தூயினி தாடிய சேதகம்