பக்கம் எண் :

1314தணிகைப் புராணம்

(இ - ள்.) சிந்தாமணி போல்வாய்! கற்பகத் தருவை ஒப்போய் ; பூங்கொத்து நிரம்பிய அத்தருவிற் படர்தரும் காமவல்லியே! அழகிய பதும நிதியே! சங்க நிதியே, கெடாத ஒளி விளக்கே! தேனே! அமிழ்தமே!

(வி - ம்.) சிந்தாமணி - நினைந்தவெலாந் தரும் தெய்வமணி, கற் பகமும் இருவகை நிதிகளும் அத்தன்மையனவே. நறை - தேன்.

(154)

 மாவி்ன் குயிலே மருதின் கிளியே
 காவின் மயிலே கானப் புறவே
 பூவின் னனமே புறவின் பிணையென்
 றேவின் விழியா ரினிதேத் தினரால்.

(இ - ள்.) மாமரத்தில் வாழும் குயிலே! மருதமரத்தில் வாழும் கிளியே! சோலைவாழ் மயிலே! காட்டில் வாழும் புறாவே! தாமரைப் பூவில் வாழும் அன்னப்பெடையே! முல்லையில் வாழும் பிணைமானே! என்று என்று அம்புபோன்ற விழியினையுடைய மடவார் இனிதாக விளித்துப் பாராட்டினர்.

(வி - ம்.) மா முதலிய இடத்தால் குயில் முதலியன சிறத்தலின் இங்ஙனம் அடை புணர்த்தார்.

(155)

வேறு

 பூமருவு பந்தர்ப் பொலந்தவிசி
           னின்றெழுந்து பூங்கொம் பொன்று
 காமரணி யணிந்து காவணத்தி
           னூடுநடை கற்றா லென்னத்
 தேமருவு கோதைத் திலகத்
           திருநுதலா டிரள்சங் கார்ப்பப்
 பாமருவு பாடல் பயிலமட
           வார்சூழப் பையச் சென்றாள்.

(இ - ள்.) தேன் பொருந்திய மலர்மாலையினையும் திலகமிட்ட அழகிய நெற்றியினையும் உடைய வள்ளி நாயகியார், மலர்ப்பந்தரின் கண் தாமிருந்த பொன்னிருக்கையினின்று எழுந்து மங்கலச் சங்குகள் முழங்கவும், பாத்தன்மை பொருந்திய இசைப்பாடல்கள் பாடா நிற்பவும், மகளிர் புடை சூழ்ந்து வரவும், பூங்கொம்பொன்று அழகிய அணிகலன்களை அணிந்து கொண்டு பந்தரினூடே நடைபயின்றாற் போன்று மெல்ல நடப்பாராயினர்.

(வி - ம்.) பொலம் - பொன். காமர் - அழகு. காவணம் - பந்தர்.

(156)