பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1315

 கம்மப் பலகலனும் வில்லுமிழ
           நூபுரமே கலைக ளார்ப்பப்
 பொம்மற் குவிமுலை யோபாரம்
           பொறையரிது போலு மென்ன
 அம்மெல் லிடைவருந்த வங்கை
           வளைதெளிர்ப்ப வான்றோ ரொன்றுஞ்
 செம்மற் கடிவினைசெய் தெய்வமணி
           மண்டபமுன் சேர்ந்துள் புக்காள்.

(இ - ள்.) கம்மத் தொழிலா னியன்ற பலவேறு அணிகலன்களும் ஒளிவீசா நிற்ப நூபுர முதலிய காலணிகளும் மேகலையணியும் ஆரவாரிப்பப் பெருத்துக் குவிந்த முலைகள் அம்மவோ! பெருஞ்சுமை என்னால் அதனைச் சுமத்தல் இயலாதென்று அழகிய நுண்ணிடை வருந்தா நிற்ப, அழகிய கையிடத்து வளையல்கள் ஒலிப்பச் சான்றோர் குழுமிய தலைமை சான்ற திருமணவினை செய்தற்குரிய தெய்வத்தன்மையுடைய மணிகளாலியன்ற மண்டப முன்றிலை எய்தி அதனகத்தே சென்றருளினர்.

(வி - ம்.) கம்மம் - ஒரு தொழில். வில் - ஒளி. போலும் ஒப்பில் போலி. செம்மல் - தலைமைத் தன்மை.

(157)

 செம்பொன் மணிப்பீடத் தும்பர்பிரான்
           சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்து
 பைம்பொன் னிழைசுமந்து பாங்கிருந்தாள்
           பாதம் பணிந்தன் னோர்தம்
 வம்பில் கருணைமழைக் குத்தழைத்
           தரும்பி மலர்ந்த கற்பக்
 கொம்பிற் கொளவொசிந்து தம்பெருமான்
           பால்குறுகி வைகி னாளால்.

(இ - ள்.) அத் திருமண மண்டபத்தின்கண் செம்பொன்னாலியன்ற தொரு மணியழுத்திய இருக்கையின் கண் வீற்றிருந்தருளிய தேவ தேவனாகிய சிவபெருமான் சேவடிகளை யடைந்து வீழ்ந்து வணங்கிப் பின்னர் அப் பெருமான் இடப்பாகத்தே பசிய பொன்னணிகல னணிந்து கொண்டு எழுந்தருளியிருந்த உமையன்னையாரின் திருவடிகளை வணங்கி அவ்வம்மையப்பரின் பழைமையான அருள் மழைக்கு அரும்பெடுத்து மலர்ந்த கற்பகத்தின் பூங்கொம்பு போன்று வளைந்து முருகப்பெருமான் பக்கத்தே சென்று இருந்தனர்.

(வி - ம்.) உம்பர் பிரான் - சிவபெருமான். பாங்கிருந்தாள் - உமை. அநாதியேயுள்ள அருள் என்பார் வம்பில் கருணைமழை யென்றார். கற்பகம் கற்பம் என்று விகாரமெய்திற்று.

(158)