பக்கம் எண் :

1328தணிகைப் புராணம்

(இ - ள்.) வானவர் மகளிர், கண்டோருடைய கொழுவிய கண்களும் நெஞ்சமும் மகிழ்ச்சியாற் றிகழும்படி விரும்புதற்குக் காரணமான மின்னல் போன்று நுடங்கவும் தங் கைவளையல் ஒலிப்பவும் இனிய சுவை மிகாநிற்பவும் கூத்தாடற்றொழிலி லீடுபட்டனர்.

(வி - ம்.) மிளிர்த்தல் - திகழ்தல். நுடங்குபு - நுடங்கி ; நுடங்க என்க. தெளிர்த்தல் - ஒளித்தல். வள்ளி - வளையல்.

(194)

 மாண்ட சோதிம ணிமுடி வானவர்
 காண்ட கக்கதித் தாடுநர் பாற்றழுஉம்
 பாண்டி லுங்குழ லுங்குரற் பாடலும்
 தீண்டு கைம்முழ வுந்திசை தேக்கின.

(இ - ள்.) காட்சியின்பமுண்டாகத் தோன்றி ஆடுவோராகிய மாட்சிமையுடைய ஒளியுடைய மணிகளாலியன்ற முடிக்கலனையுடைய தேவர் தம்பாற் றழுவியுள்ள பாண்டிலும் வேய்ங்குழலும் மிடற்றுப் பாடலும் கையாற் றீண்டி முழக்கப்படும் மத்தளமும் தம் மிசையாலே எண்திசைகளையும் நிரப்பின.

(வி - ம்.) கதித்து - தோன்றி. பாண்டில் - கஞ்சதாளம். குரற் பாடல் - மிடற்றுப் பாடல். கைதீண்டுமுழவென்க.

(195)

 பானு கம்பன்ப ணிலமு ரன்றன
 மான வாணன்கு டமுழா மல்கிய
 தான பீலிவ யிர்பணை யாதிய
 ஈன மில்கண நாதரி யம்பினார்.

(இ - ள்.) பானு கம்பனுடைய சங்கங்கள் முழங்கின; வாணா சுரனுடைய குடமுழா முழக்கம் பெருகிற்று. இயற்றப்பட்ட சிறு சின்னங்களும் கொம்புகளும் பறைகளும் இன்னோரன்ன பிறவுமாகிய கருவிகளைக் குற்றமற்ற சிவகணத் தலைவர்கள் முழக்கா நின்றனர்.

(வி - ம்.) பானுகம்பன் - ஆயிரந்தலையுடையானொரு சங்கம்பிடிப்போன். பீலி - சிறுசின்னம். வயிர் - கொம்பு பணை - பறை.

(196)

 இலக்கர் வீரர்கை யேந்துப டையொடும்
 கொலைக்க ளிற்றைக்கு லாயினர் வீரருள்
 தலைக்க ணின்றவன் றாங்குகை வேத்திரத்
 தலக்கண் சிந்தவ டர்சனந் தாக்கினான்.

(இ - ள்.) இலக்க வீரர்கள் கையிலேந்திய படைக்கலன்களோடு கொலைத் தொழில் வல்ல களிற்றுயானையைச் சூழ்ந்து சென்றனர். அவ் வீரருள் முன்னின்ற வீரவாகு தன் கையிலேந்திய பிரம்பினாலே துன்ப மகலும்படி ஆண்டுக் குழுமுகின்ற மக்களைத் தாக்கி யகற்றினான்.

(வி - ம்.) குலாயினர் - சூழ்ந்தனர். வேத்திரம் - பிரம்பு.

(197)