பக்கம் எண் :

வள்ளிநாயகி திருமணப் படலம்1329

 வடகி ழக்குத்தி சைப்புற வாழ்க்கையங்
 கடவு ளேற்றிமிற் கண்ணுதற் புண்ணியன்
 தொடலை மார்பந் துணைக்கையிற் பின்னுபு
 முடிவி லாதவி ருதுமு ழக்கினான்.

(இ - ள்.) வடகிழக்குத் திசையின்கண் வாழா நின்ற வாழ்க்கையையும் இமிலையுடைய தெய்வ விடையினையும் நெற்றிக் கண்ணையும் உடைய அறவோனாகிய ஈசானன் மாலையணிந்த தன் மார்பின்கண் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு எம்பெருமானுடைய அழிவற்ற விருதுகளைக் கூறி வந்தனன்.

(வி - ம்.) ஈசானன் என்னும் திசைக்காவலன் விருது கூறினான் என்க. விருது - வெற்றிப்புகழ்.

(198)

 சோம திக்கினன் றுன்னிவ லப்புறம்
 காமர் பாகடை கைத்தல நீட்டினான்
 வாம பாகம ரீஇப்பொற்ப டியகம்
 நாம வேற்றரு மன்னணு குற்றனன்.

(இ - ள்.) வடதிசைக் காவலனாகிய குபேரன் எம்பெருமானுடைய வலப்பக்கத்தே நின்று பாக்கும் வெற்றிலையும் திருக்கையி லீந்தனன். இடப்பாகத்தே அச்சந்தரும் வேலினையுடைய கூற்றுவன் பொன்னாலியன்ற படிக்கத்தைக் கைக்கொண்டு வாராநின்றனன்.

(வி - ம்.) சோமதிக்கு - வடதிசை. பாகு - பாக்கு. அடை - வெற்றிலை. படியகம் - படிக்கம் - எச்சி லுமிழ்கலம். தருமன் - கூற்றுவன்.

(199)

 மாகர் போற்றிய மண்டமர் ஞாட்பிடைத்
 தோகை மாமயி லாகிய தோன்றறான்
 ஏக நாயக னேவலி னங்குசப்
 பாக னாகிப்ப கடுந டத்தினான்.

(இ - ள்.) சிவபெருமானுடைய அருட்பணியை மேற்கொண்டு தேவர்களாற் புகழப்பட்ட போர்த்தொழின்மிக்க களத்தின்கண் தோகையை யுடைய பெரிய மயிலாகி எம்பெருமானைச் சுமந்த தேவேந்திரனே தோட்டியையுடைய வலவனாகி யானையை நடத்தாநின்றனன்.

(வி - ம்.) மாகர் - தேவர். ஞாட்பு - போர்க்களம். தோன்றல் - ஈண்டிந்திரன். ஏக நாயகன் - சிவபெருமான்.

(200)

வேறு

 வரையு மாடமு மேடையு மண்டப மாலையும்
 விரைய சோலையும் வாயிலும் வீதியு மாந்தர்கள்
 நிரைய விண்ணவர் விண்ணிட மெங்குநி ரைந்தனர்
 அரைய ரூர்களி றவ்வயி னவ்வயி னின்றவே.