பக்கம் எண் :

1332தணிகைப் புராணம்

வேறு

 தண்ண றும்புன றசும்பி னேந்திப்போய்
 அண்ணன் மாகளிற் றடியின் வாக்குபு
 கண்ணி யுங்கமழ் கலவை யுஞ்செழுஞ்
 சுண்ண முஞ்சிலர் சொரிந்து போற்றினார்.

(இ - ள்.) திருவுலாக் காட்சியைக் கண்டோர் சிலர் குடங்களிலே குளிர்ந்த நறிய நீரை முகந்து கொடுபோய் பெருமான் ஊர்ந்து வரும் பெரிய களிற்றியானையின் அடிகளிலே வாக்கிப் பின் மலர்மாலையும் மணங்கமழாநின்ற கலவைச்சாந்தமும் செழிப்புடைய பொற்சுண்ணமும் சொரிந்து வணங்காநின்றனர்.

(வி - ம்.) தசும்பு - குடம். அண்ணல் சிறப்பெனக் கொண்டு களிற்றிற் கடையாக்கினுமாம்.

(207)

 சுரக்குந் தம்முகச் சுடர்க வர்ந்துவிண்
 கரக்கு மாதவற் கரைத்துக் காட்டியாங்
 கரக்கு நீர்க்கல னங்கை யிற்சுலாய்ப்
 பரக்க மண்ணிடைப் பாய்த்தி னார்சிலர்.

(இ - ள்.) சிலமகளிர் தம் முகத்திலே சுரவாநின்ற சுடரினைக் கவர்ந்து கொண்டு விண்ணிடத்தே சென்று மறையா நின்ற கதிரவனைக் கரைத்து மற்றையோர்க்குக் காட்டினாற்போன்று, அரக்குநீர் நிரப்பிய கலத்தினுட் கையிட்டுச் சுழற்றி நிலத்தின்மேற் பரவுமாறு பாய்ச்சா நின்றனர்.

(வி - ம்.) கதிரவன் நிழலுருவம் கலத்துட் டோன்றலின் அவ் உருவத்தைக் கரைத்தாற்போலக் கையானீரைச் சுற்றினர் என்பது கருத்து. கதிரவனைக் கரைத்தற்கு ஏது அவன் தம்முகச் சுடரைக் கவர்ந்தமை.

(208)

 குவவுக் கோணுதல் குறித்துத் தேய்தரும்
 உவவுத் திங்களை யுறுப்ப கைத்தகைத்
 தவவுக் கோளினார்க் கறிவித் தாங்குத்தூய்க்
 கவவுக் கைப்பொரி கஞற்றி னார்சிலர்.

(இ - ள்.) வேறு சிலமகளிர், தம்முடைய பெரிய வளைந்த நெற்றியினைப் போலவாதல் வேண்டித் தேயாநின்ற முழுத்திங்களின் கலைகளை முறித்து முறித்து, அத்திங்களை அவாவும் பாம்புக்கோள்களுக்குத் தெரிவித்தாற்போன்று பொரியினைக் கையகத்திட்டு இட்டுச் சிதறினார்.

(வி - ம்.) பொரி நிரப்பிய வட்டில் முழுத்திங்கட்குவமை. பிடி பிடியாய் அள்ளுதல் திங்களின் கலைகளை முறித்தற்குவமை. முறித்தற்குக் காரணம் தந்நுதலை ஒத்தற்குத் தேய்தல்.

(209)