பக்கம் எண் :

1334தணிகைப் புராணம்

வியாதன்கை நந்தியங்கடவுள் ஆணையால் கீழே தொங்கவிட முடியாதபடி நின்றது போலச் சிலர் ஒடுக்கி மேலே யுயர்த்திய இரண்டு கைகளையும் மாந்தர் நெருக்குதலானே தொங்க விடமுடியாராய் நின்றனர்.

(வி - ம்.) முருக்குமண்ணல் - சிவபெருமான். பொர - நிகர்ப்ப. ஈண்டு தொங்கவிடமாட்டாமை உவமை.

(213)

பேதை மகளிர்

வேறு

 வண்ட லாட்டயர் பேதையர் வரிப்புனை பந்து
 விண்டு தாங்கிய வம்மனை வீற்றுவீற் றொழிய
 மண்டு சீறடிக் கிண்கிணி வண்சிலம் பொலிப்பச்
 செண்டு தாங்கிய களிற்றெதிர் மேனிலைச் சென்றார்.

(இ - ள்.) விளையாட்டயரும் பேதைப் பருவத்துமகளிர் தம்முடைய வரிந்து புனைந்த பந்தினையும் ஏந்திய அம்மனையையும் அங்கங்கே கிடக்க விட்டுப் பிரிந்து ஓடாநின்ற தமது சிற்றடியின் கிண்கிணியும் வளவிய சிலம்பும் ஆரவாரிக்கும்படி பூச்செண்டேந்தி வருகின்ற களிற்றுயானையின் எதிரேயமைந்த மேனிலை மாடத்தை எய்தினர்.

(வி - ம்.) வண்டல் - மகளிர் விளையாட்டு. விண்டு - விலகி. அம்மனை - அம்மனைக்காய்கள். மேனிலை - மேல் வீடு.

(214)

 வேழம் வாசவற் கென்பர்க ளவன்கொலோ வென்றார்
 வேழ மூர்பவ னேயவ னெனவெதிர் விரித்தார்
 வேழ மோம்பிய விண்டுகொ லென்றன ரவனே
 வேழ வாமத்துச் சாமரை வீசுவா னென்றார்.

(இ - ள்.) அப் பேதை மகளிர் சிலர், யானையூர்தி இந்திரனுக்குரியது என்பர். அதுகேட்ட வேறு சிலர் யானையூர்ந்து வருமிவன்றான் அவ் விந்திரனோ என்று வினவினர்? அதுகேட்ட வேறுசிலர் அவ்விந்திரனே பாகனாய் இக்களிற்றை நடத்துபவன் என்று விளக்கினர். வேறு சிலர் யானையை முதலை வாயினின்றும் உய்வித்தோம்பிய திருமாலோ என்று வினவினர். அதுகேட்ட வேறு சிலர் அத்திருமாலே அக்களிற்றின் இடப்பக்கத்தே நின்று சாமரை வீசுபவன் கண்டீர் என்றனர்.

(வி - ம்.) வாசவன் - இந்திரன். விண்டு - திருமால்.

(215)

 பொருத ஞாட்பிடை யிந்திர னொடுபுரண் டமைதான்
 கருதி மாதவம் புரிந்துறுங் களிறுகைக் கொண்ட
 முருக னோவென வினாயினர் முழுவியவ் வாயை
 உருவ வாளரித் தடங்கணி ருரைத்தவே ளென்றார்.