பக்கம் எண் :

1344தணிகைப் புராணம்

(இ - ள்.) தோழீ அவ்விடத்தே யாது செய்தனை, தோழனுந் தலைவன் பக்கத்தே உளனாதலையுணராமல் நீ நினது ஆடையினையும் நிறையினையும் தோற்றனையே இது நின் தகுதிக்கிழுக்காம் என்று தந் தலைவியரை இடித்துரைத்தே தோழியரும் ஊழ் வினைவந்துறுத்தலானே நிலைதடுமாறுஞ் சான்றோர் போன்று தம்முடைய நிறையினையும் கலையினையும் இழந்து தம் பக்கத்தே ஆடா நின்ற நெடிய கொடிச் சேலையை யவிழ்த்து அழகுமிக்க ஆடையாக உடுத்துக்
கொள்வாராயினர்.

(வி - ம்.) எலுவி - தோழி. எலுவன் - தோழன். கழறினோர் - இடித்துரைத்தோர், ஊழான் நிலைதடுமாறுஞ் சான்றோர் போல என்க.           

(241)

 அங்கியங் கண்ணிற் றோன்று மங்கியே யிவன்மெய் யென்ப
 திங்கனு பவத்திற் கண்டா மிளகிய சாந்தந் தீயப்
 பொங்கொளி முத்த மாலை பெரியமெய்ம் மாமை நீறத்
 தங்கிய வுளத்தொ டாவி தழற்றிய தாவா வென்றார்.

(இ - ள்.) சில மகளிர் ஆ! ஆ! இம்முருகப்பெருமான் இறைவனுடைய அழகிய நெருப்புக் கண்ணிலே பொடித்த நெருப்பே யாவன் என்று அறிஞர் கூறுவது உண்மையே என்பதை இவன் யாமணிந்த நெகிழ்ந்த சந்தனந் தீயும் படியும் ஒளிமிக்க முத்துமாலை பொரிந்து போம்படியும் எம்முடலின் மாமை நீறாகவும் எம்பாற்றங்கிய நெஞ்சத்தையும் உயிரையும் சுட்டதனால் இவ்விடத்தே எம் அனுபவத்தினாலேயே தெளிந்துள்ளேம் என்று வியந்தனர்.

(வி - ம்.) அங்கி - நெருப்பு. மாமை - நிறம். ஆ - ஆ - வியப்பு.

(242)

 அரம்பைய ரல்குற் றீர்ந்த வவிர்கலை வரத்துக் கேந்தும்
 கரம்பட நோக்கித் தூசு கழிந்ததம் மல்கு னோக்கி
 நிரம்பிய கருணை நீரா னின்மல னருளிற் றென்னா
 வரம்பிலின் புற்றா ரொத்தார் மண்ணவ ரணிந்து தாழ்ந்தார்.

(இ - ள்.) மானிட மகளிர் தாம் வரம் வேண்டற்பொருட்டு ஏந்திய தங் கைகளிலே வானவர் மகளிர் இடையினின்றும் வீழ்ந்த விளங்கிய ஆடை வீழ அவற்றை நோக்கி இவற்றை ஆடையிழந்த தம் நிலையினை நோக்கிப் பெருகிய பேரருளுடைமையானே எம் பெருமான் வழங்கினான்போலும் என்று கருதி எல்லையற்ற இன்பவீட்டை யடைந்தார் போன்று மகிழ்ந்து அவற்றை அணிந்துகொண்டு பெருமானுடைய அடிகளிலே வீழ்ந்து வணங்கினர்.

(வி - ம்.) கலை - ஆடை. வரம்பிலின்பம் - வீடு பேறு.          

(243)

 முயங்குத லெய்தா மேனு முலைக்குறி வயக்கா மேனும்
 மயங்கிமெய் யவச மாகுங் கரணத்தின் மலையா மேனும்
 தயங்கொளி யுருவ நோக்கித் தளிர்த்துளே முயங்கக்கொண்டிங்
 கியங்குவ தோடை யானை யென்செய்வா மென்று நைவார்.