பக்கம் எண் :

1346தணிகைப் புராணம்

 விடுசுடர்ப் பந்தர் மாலை வித்துரு மத்தைப் பற்றி
 இடுகிடை குழைய மார்பத் திறுகுற வணைத்து மோந்தார்.

(இ - ள்.) சில மகளிர் விளக்கமுடைய தீப்பிழம்பு சுடுவதாதலைக் கருதாதவராய் அத்தீப்பிழம்பு எம்பெருமானுடைய திருமேனிபோன்று அசைகின்ற தென்னும் அவாவான் ஞெரேலெனத் தழுவி முத்தமிட்டனர். வேறு சிலர் ஒளியுடைய பந்தரின்கண் நாலவிட்டிருந்த பவள மாலையை அஃதெம்பெருமான் நிறம் போறலின் தமது சிற்றிடை குழையும்படி பிடித்து மார்பத்து நெருங்கத் தழுவி முத்தமிட்டனர்.

(வி - ம்.) அடிகளார் - முருகப்பெருமான். ஆர்வம் - அவா. கதுமென - விரைவுக்குறிப்பு. வித்துருமம் - பவளம்; இளந்தளிருமாம்.

(247)

 கடம்பவிர் தார்க ளாகக் கற்சுனைக் குவளை யாகத்
 தடம்பொழின் மலர்க ளாகச் சாரலிற் சாந்த மாக
 இடம்படப் பிறந்தே மில்லை யெற்றுக்குப் பெண்க ளாக
 உடம்பெடுத் துழிதந் தேமென் றுற்பவ மொறுத்து நின்றார்.

(இ - ள்.) சில மகளிர் "அந்தோ! யாம் கடப்ப மரத்திலே தோன்றி விளங்குகின்ற மலர்மாலைகளாக வாதல், அன்றி மலையின்கட் சுனையில் குவளை மலராகவாதல், அன்றி, பெரிய பூம்பொழில்களிடத்து மலர்களாகவாதல், அல்லது, மலைச்சாரற் சந்தனமாகவாதல் எம்பெருமான் திருமேனியில் நமக்குமோரிடமுண்டாகப் பிறந்தோமில்லை. ஏனோ வீணான இப் பெண்ணுடல் எடுத்திருந்தோம் என்று தமது சிறப்பினை வெறுத்து வருந்தா நின்றனர்.

(வி - ம்.) கடப்பந்தார் முதலியவைகளாய்ப் பிறந்தால் பெருமான் மேனியைத் தழுவலாம் என்பது கருத்து. உழிதருதல் - இருத்தல்.

(248)

 தேம்பிய மருங்கு றேய்ப்பச் சீதளக் கலவை யாடப்
 பூம்பசுந் தொடலை சூடப் பொழிகதிர்க் கலன்க டாங்கத்
 தாம்பெரி தோங்கிற் றல்லாற் சண்முகற் றோய்தற் கோவென்
 றோங்கிய முலைகள் காவா ருருவத்தோட் டுணையுங் காவார்.

(இ - ள்.) வேறுசில மகளிர் இம்முலைகளும் அழகிய இத்தோள்களும் பருத்தது வருந்திய எமதிடையைத் தேய்த்தற்கும் குளிர்ந்த கலவைச் சாந்தம் பூசிக்கோடற்கும், அழகிய பசிய மலர்மாலை யணிந்து கோடற்கும் ஒளி வீசும் அணிகலன்களை அணிந்து கோடற்கும் அல்லது ஆறுமுகப்பெருமானைத் தழுவிக் கோடற்கன்றே! இவற்றாற் பயனென்! என்று வெறுத்து அவற்றைப்
பேணாதொழிந்தனர்.

(வி - ம்.) மருங்குல் - இடை. சீதளம் - தண்மை, தொடலை - மாலை.

(249)

 உறுப்பினுட் சிறந்த கண்கா ளுத்தமற் காட்டி யுள்ளம்
 இறுப்பது புரிந்து நின்றீ ரெழிலுரு மீட்டு நோக்கிப்