பக்கம் எண் :

1352தணிகைப் புராணம்

விடையருள் படலம்

 தாமரை குவளை கயிரவ முல்லை
           சண்பகங் காந்தணால் வகையின்
 பூமலர்ந் தொளிரும் பன்மணி கான்று
           பொன்னொளி தழைத்தெழுந் தெய்வக்
 காமரு கொடியோ ரிரண்டொடு தழைத்த
           கற்பகத் தருவென மணந்த
 தேமரு குழலா ருடனமர் வரதன்
           சேக்கையா யொழிந்ததென் னுளமே.

(இ - ள்.) என்நெஞ்சம், தாமரை குவளை ஆம்பல் முல்லை சண்பகம் காந்தள் என்னும் நீர்ப்பூ நிலப்பூக் கோட்டுப்பூக் கொடிப்பூவாகிய நான்கு வகைப்பட்ட மலர்களும் மலர்ந்து திகழாநின்ற பலவாகிய மணிகளையும் அரும்பிப் பொன்னொளியோடு செழித்து வளர்கின்ற விரும்புதற்குக் காரணமான இரண்டு தெய்வக் கொடிகளோடு தழைத்துள்ள கற்பக மரம்போன்று தான் மணந்துகொண்ட தேன்மருவிய கூந்தலையுடைய வள்ளியம்மையாரோடும் தேவசேனையோடும் வீற்றிராநின்ற முருகப்பெருமான் எழுந்தருளிய இருக்கையே ஆயிற்று.

(வி - ம்.) என் உளம் வரதன் சேக்கையாயொழிந்தது, என்க.

(1)

வேறு

 பொன்னணி பூண்முலை வல்லி யோடு
           பூவமல் சேக்கையி னாட்ட யர்ந்த
 மின்னவில் வேல்வலத் தெந்தை யன்றை
           விடியலெ ழுந்துபல் லோர்து வன்றத்
 தன்னிகர் மன்றல்செய் கோயி னீவித்
           தானர சாளுமுன் கோயி லண்மி
 மன்னிய தன்னிரு பாலு மாதர்
           வைகமென் பூவணை வீற்றி ருந்தான்.

(இ - ள்.) மின்னா நின்ற வேலின் வெற்றியையுடைய எம்பெருமான், பொன்னணிகலன் அணிந்த முலையையுடைய வள்ளிநாயகியாரோடு மலர்செறிந்த படுக்கையின்கண் கலவித் திருவிளையாட னிகழ்த்திய அற்றை நாளிரவின் வைகறைப் பொழுதிலே எழுந்தருளிப் பலரும் நெருங்கும்படி ஒப்பற்ற திருமணத்தை நிகழ்த்திய மண்டபத்தினின்றும் புறப்பட்டு, தான் வீற்றிருந்து அருளாட்சி புரிதற்கிடமான பழைய திருக்கோயிலை எய்தி நிலைபெற்ற தன்னுடைய இருமருங்கும் வள்ளிநாயகியும் தேவசேனையும் அமர்ந்திருப்ப மெல்லிய மலரணைமேல்
வீற்றிருந்தருளினன்.