பக்கம் எண் :

விடையருள் படலம்1353

(வி - ம்.) வல்லி - வள்ளி. அமல் - செறிந்த. நீவி - நீத்து.

(2)

 போதுநெ கிழ்ந்தவிழ் தீர்த்த மாடிப்
           பூதிய ணிந்துகைப் போது தாங்கி
 மாதவர் வானவர் வேதன் மாயன்
           மற்றவர் மேற்படுந் தேவ ரேனோர்
 ஏதமி றத்தமி ருக்கை யண்ண
           வெண்ணுமு ளத்தொடி றைஞ்சி யேத்த
 மேதக வாரரு ணல்கி யார்த்தி
           வேட்டவ ரங்களும் போத விட்டான்.

(இ - ள்.) முனிவரும் தேவரும் பிரம்மதேவனும் திருமாலும் இவரினும் மேம்பட்ட உருத்திரர் முதலிய ஏனைத் தேவரும், மலர்முறுக்குடைந்து மலரா நின்ற குமார தீர்த்தத்திலே ஆடித் திருநீறணிந்து கைகளிலே மலரேந்திச் சென்று குற்றமற்ற தத்தமுலகிற்குப் போகக் கருதிய நெஞ்சமுடையராய் எம்பெருமானை வணங்கி வாழ்த்த எம்பெருமான் அவர்கள் மேன்மையடையத்தக்க பேரருளை வழங்கி மேலும் அவர் விரும்பிய வரங்களும் ஈந்து விடைகொடுத்தருளினன்.

(வி - ம்.) பூதி - திருநீறு மேற்படுந் தேவர் பல்வேறு வகை உருத்திரர் முதலியோர் என்க. அண்ண - அணுக. போத - செல்லுதற்கு விட்டனன் - விடை ஈந்தான்.

(3)

 பன்மலை வாழ்நர்ப ரந்து சூழப்
           பாங்கிபல் லாயங்கைத் தாய்நற் றாயும்
 சொன்மலி தன்முன்னவந் தோரும் பம்பத்
           தோகைதன் றாதைமுன் போந்த டுத்து
 வின்மலி பாதந்தன் சென்னி தீட்டி
           விம்மிதத் தோடெதிர் நின்று போற்றிப்
 பொன்மலி யிவ்வரை யென்றும் யாங்கள்
           போந்துமைக் காணவி ருத்தி ரென்றான்.

(இ - ள்.) வள்ளி நாயகியாரின் தந்தையாகிய நம்பி மன்னன் பல மலைகளிலும் வாழும் சுற்றத்தார் பலரும் பரவிப் புடைசூழவும், தோழியும் ஆயமகளிரும் செவிலியும் நற்றாயும் உடன் வரவும் எம்பெருமான் திருமுன் வந்து ஒளிமிக்க அவன் திருவடிகளிலே தம் தலை பொருந்த விம்மிதமுடையனாய் வணங்கி எழுந்து எதிரேநின்று வாழ்த்திப் பெருமான் பொன்மிக்க இத் திருத்தணிகை மலையின்கண் எக்காலமும் அடியேங்கள் வந்து வழிபடும்படி இருந்தருள்க என்று வேண்டினன்.

(வி - ம்.) பாங்கி - வள்ளியின்றோழி. கைத்தாய் - செவிலி. தோகை - வள்ளி.

(4)