பக்கம் எண் :

விடையருள் படலம்1355

 முந்துற விந்திரன் மாம களார்
           முன்னர டுத்துவ ணங்கிப் போற்றிச்
 சுந்தர வல்லியை யண்மி நீடத்
           தொழுதுநின் றேவப்பெ யர்ந்து போந்தான்
 பைந்தொடி தாயரு மேனை யோரும்
           பாங்குற மூவர்க்குந் தாழ்ந்து கூறிக்
 கொந்தொளி மாமணி யிட்டுப் போதுங்
           கோளர விற்கடுத் திட்டுப் போந்தார்.

(இ - ள்.) முன்னர் தேவசேனையார் திருமுன் சென்று அவரை வணங்கி வாழ்த்திப் பின்னர் சுந்தரவல்லியாகிய வள்ளி நாயகியாரை யணுகி நெடிது தொழுது நின்று அவர் ஏவுதலானே அவ்விடத்தினின்றும் அகன்றனன். பின்னர் வள்ளியின் நற்றாயும் பிறருமாகி மகளிர், பண்புறும்படி எம்பெருமான் முதலிய மூவர்க்கும் வணக்கஞ் செய்து தமது செலவினையுணர்த்திப் பெருமையுடைய ஒளிபடைத்த சிறந்த மணியினைக் கான்று வைத்துப் பிரிந்து செல்லா நின்ற கொல்லுதற் றொழிலுடைய பாம்பினை ஒப்பச் சென்றனர்.

(வி - ம்.) இந்திரன் மகளார் - தேவசேனை, "அண்மி நீடத் தொழுது நின்றேவ" என்புழி அணுகி நிற்ப அவள் தொழுது நின்று ஏவ என்று மொருபொருள் தோன்றுதலுணர்க. மணி - வள்ளிக்குவமை. கடுத்திட்டு - ஒரு சொன்னீர்மைத்து - கடுத்து என்க.

(7)

வேறு

 யாவருந் திருவரு ளெய்திப் போதலும்
 மூவரும் வழிபடு முதல்வ னோக்கினால்
 பூவரு மடந்தையைப் புற்கென் றாக்கிய
 மேவரு மாதராண் மேவித் தாழ்ந்தனள்.

(இ - ள்.) இவ்வாறு அமரரும் வேடரும் பிறரும் எம்பெருமான் திருவருள் பெற்றுச் சென்ற பின்னர் முப்பெருங் கடவுளரும் வழிபடா நின்ற முருகப் பெருமானுடைய திருக்குறிப்பு நோக்கத்தை யுணர்ந்த வள்ளி நாயகியார் திருமகளைப் பொலிவிழக்கச் செய்த பேரழகுடைய மேம்பாடுடைய தேவசேனையாரை எய்தி வணங்கினர்.

(வி - ம்.) முதல்வன் - முருகன். "பூவருமடந்தையைப் புற்கென்றாக்கி மேவரு மாதராள்" என்பதனை வள்ளிக்கே ஏற்றலும் பொருந்தும்.

(8)

 தழுவிள ளெடுத்துட றைவந் தெங்கைநீ
 விழுமிய துணையென மேவி னாயெனக்
 கெழுவிய காதலிற் கிளந்து விண்ணவர்
 தொழுகுல யானைதன் றுணைவற் றாழ்ந்தரோ.