பக்கம் எண் :

விடையருள் படலம்1371

 அரம்புபுரி யாணவம ருட்டவறி வற்றிரு
           ளகன்றவறி வேநி லயமாய்
 வரம்பிலரு ளீசனுரு வங்கொடுபி றர்க்கருள்
           வழங்குமொரு வாய்மை யறியா
 துரம்பயில்வி லாதவிளை யானெனவ ணங்கில
           னொழிந்துபடை வேல வனையான்
 நிரம்பியபெ ருங்கருணை யாளனைவ ணங்கிநெறி
           யாற்பெயர்வு கொண்டி யறலும்.

(இ - ள்.) நாரதனே ! கேள் ! யான் ஒருகாலத்தே குறும்பு செய்யா நின்ற ஆணவமலம் மயக்குதலானே அறிவிழந்துபோய் அநாதியே ஆணவமலமகன்ற வாலறிவே தனக்கு இருக்கையாகிய சிவபெருமானே தனக்கியல்பான வரம்பில்லாத முருகப்பெருமான் உருவங்கொண்டு தேவர் முதலியோர்க்குத் திருவருள் வழங்குமோர் உண்மையை அறிந்து கொள்ளாமையாலே வேற்படையையுடைய அம்முருகனை அறிவுப் பயிற்சியிலாததொரு சிறுவன் என்று எண்ணி அவனை வணங்காமல் பேரருள் நிரம்பிய சிவபெருமானை மட்டும் முறையாலே வணங்கிவிட்டு மீண்டு செல்லா நின்றுழி,

(வி - ம்.) அரம்பு - குறும்பு. இருளகன்ற அறிவு - மெய்யறிவு. உரம் - அறிவு. வணங்கிலன் : தன்மை ஒருமை வினைமுற்று ; முற்றெச்சம்.          

(7)

 வேதமுத லோதுபொருள் யாதெனவி னாயெனை
           விதும்புறவ துக்கி நெடுநாள்
 காதுசிறை வைத்திரச தக்கிரிக ழன் றுகவி
           னான்றவட வேங்க டமுறீஇத்
 தீதறவு யிர்த்தொகுதி நல்கியிறை யேவவிடு
           திண்சிறையெ னக்கொ ருவுவித்
 தாதிவின வச்சுருதி யாதிமொழி யின்பொரு
           ளறைந்தவரை யந்த வரைகாண்.

(இ - ள்.) அம்முருகப் பெருமான் என்னை நோக்கி மறையின் முதற்கண் அமைந்த மொழியின் பொருள் யாதென வினவி அதற்கு யான் விடை கூறாமையானே யான் நடுங்கும்படி தலையிற் குட்டிக் கூறு செய்த சிறையின்கண் வைத்துப் பின்னர் வெள்ளிமலையினை யகன்று அழகு நிரம்பிய வடவேங்கட மலையினை எய்தி ஆண்டிருந்து உயிரினத்தின் தீமை தீரும்படி திருவருள் வழங்கிப் பின்னர்ச் சிவபெருமான் பணித்தலானே எனக்குச் சிறைவீடு செய்வித்து, அப்பரமசிவனாரே வினவுதலானே அவ்வேத முதன்மொழியின் பொருளை அச்சிவபெருமானார்க்குணர்த்தப்பட்ட மலை அத் திருத்தணிகை மலையே
என்றுணர்வாயாக.