பக்கம் எண் :

1374தணிகைப் புராணம்

(இ - ள்.) இன்னும், இந்திரன் மகனாகிய சயந்தனோடு தேவர்களையும் பெரிய சிறையிலே தள்ளிய சூரபதுமன் முதலிய அவுணரையும் அவருடைய வெவ்விய ஆற்றலுடைய நெடிய படைகளனைத்தையும் முருகப்பெருமான் கொன்று வெற்றியுடைய வாகை மாலையைத் திருமுடியிலே சூடிக்கொண்டு அவ்வசுரர் முன்பு கவர்ந்த திருமால் முதலியோர் செல்வங்களனைத்தையும் வாரிக்கொண்டு வந்து இருந்த பின்னர் யாங்கள் அணுகித் தவம்புரிந்து அப்பெருமான் வழங்குதலானே அச்செல்வங்களைப் பெறுதற்கிடமாயது அத்திருத்தணிகை மலையே காண்.

(வி - ம்.) உயிர்த்த - பெற்ற. இருவுபு - இருத்தி : இருத்த என்க.

(12)

 முன்னரொரு காலமற வோய்தணிகை நாதனடி
           முன்னிநெடு மண்ணி லுறுநீ
 அன்னநடை யன்னநடை மின்னிடைம ருங்குலமிழ்
           தன்னமொழி மஞ்ஞை யியலின்
 கன்னிகவி னின்னதென வன்னவன டந்துகள
           வாற்றியுட னுய்த்தெ வர்களும்
 துன்னவது வைத்தொழின்மு டித்துவிளை யாடல்புரி
           தொல்லைவரை யந்த வரைகாண்.

(இ - ள்.) அறவோனே ! நீ முன்னொரு காலத்திலே தணிகைப் பெருமான் திருவடிகளை வணங்கக் கருதி நிலவுலகிலே சென்றபொழுது அன்னநடை போன்ற நடையினையும் மின்னல் போன்ற இடையாநின்ற மருங்குலையும் அமிழ்தம் போன்ற மொழியினையும் மயில்போன்ற சாயலினையும் உடைய வள்ளிநாயகியின் அழகு இத்தகையது என்று கூறாநிற்ப அம்முருகப்பெருமான் அம்மலைநிலத்தே சென்று களவொழுக்கம் புரிந்து அந்நாயகியை உடன் கொடுவந்து எல்லோரும் வந்து குழுமா நிற்பத் திருமணத் தொழிலியற்றி முடித்துத் திருவிளையாடல் புரிந்த பழைய மலை அத் திருத்தணிகை மலையே (என்பது நீயும் அறிதியன்றே).

(வி - ம்.) அறவோய் - விளி. கன்னி - வள்ளி. களவு - களவொழுக்கம்.

(13)

 மேதகவி ளங்குமதன் மான்மியம னந்தமுள
           வெற்கடவு ளேய றியுமால்
 ஆதலின னுக்கிரகம் யாவுமவ னேயுடைய
           னவ்வருள்வ ழங்கு மிடமும்
 ஓதியது வேநனிதெ ரித்தியென வோதிம
           முயர்த்தவன சத்த விசின்மேல்
 வேதியனு ரைப்பமகிழ் வுற்றடிப ணிந்துவிடை
           பெற்றனனல் வீணை முனிவன்.