| | கொன்னவில்வேற் படைவள்ளல் குறுகினன்வல் லையெழுந்து | | | பொன்னவில்பா தமிறைஞ்சிப் போற்றினனா ரதன்மாதோ. |
(இ - ள்.) யோகநிலையின்கண் பலநெடிய காலங்கள் கழிந்துழி எம்மையாளுடைய பெருமைமிக்க வேற்படையினை ஏந்திய வள்ளலாகிய முருகப்பெருமான் பூதத் திரளும் தேவர் திரளும் புடை சூழ்ந்து வர நெடிய தோகை மாமயின்மிசை ஏறி அந்த நாரத முனிவன் முன்னர் எய்தினன் ; அஃதுணர்ந்த நாரதன் விரைந்தெழுந்து பொன்போன்ற திருவடிகளை வணங்கி வழிபட்டனன். (வி - ம்.) பாரிடம் - பூதம். பிணிமுகம் - மயில். வல்லை - விரைந்து. (26) இதுமுதல் மூன்று செய்யுள் கந்தர்வ மார்க்கத்தான்இடைமடக்கி வந்த தேவபாணிக் கொச்சக வொருபோகு. வேறு | | தடவரை மணியொளிர் தணிகையங் கிரியினை | | | கடவுளர் சிறைதபு கருணையங் கடலினை | | | கடவுளர் சிறைதபு கருணையை யாதலின் | | | இடர்தப வெளியமு மிணையடி பரவுதும். |
(இ - ள்.) எம்பெருமானே ! நீ பெரிய மூங்கிலீன்ற முத்துகள் ஒளிரும் திருத்தணிகை என்னும் அழகிய மலையின்கண் எழுந்தருளியிருக்கின்றாய். மேலும் தேவர்கள் சிறைவீடு பெறுதற்குக் காரணமான பேரருட் கடவுளாகவுமிருக்கின்றனை ; தேவர்களைச் சிறைவீடு செய்யும் பேரருளுடையை யாதலின் எளியேமாகிய யாங்களும் எம்மிடரினின்றும் வீடுபெறற் பொருட்டு நின் திருவடிகளை வணங்கா நின்றேம். (வி - ம்.) தடவரை - பெரிய மூங்கில். கடவுளர் - தேவர். தப - கெட. (27) | | மகளிர்க ளிருவரின் வதிதரு மெழிலினை | | | துகளறு துறவியர் துறவியென் றிலகினை | | | துகளறு துறவியர் துறவியை யாதலின் | | | இகலற வெளியமு மிணையடி பரவுதும். |
(இ - ள்.) மகளிருவரோடு வாழ்வின்கண் அமராநின்ற இல்லற வாழ்க்கையின் அழகினையுடையை. அங்ஙனமிருந்தும் பற்றற்ற துறவோர்க்குந் துறவோனாய்த் திகழாநின்றனை. துறவோர்க்குந் துறவோனாயிருத்தலின் எளியேமும் எம்மாறுபாடு கெடுதற்பொருட்டு நின் அடிகளை வணங்காநின்றேம். (வி - ம்.) மகளிர் - வள்ளியும் தேவசேனையும். துகள் - காம முதலியன. இகல் - மாறுபாடு. (28) |