பக்கம் எண் :

146தணிகைப் புராணம்

(இ - ள்.) சந்திரகாந்தக் கற்கள் பதிக்கப்பெற்ற பொன்மயமாகிய மாடத்தோடு கூடிய மாடமாளிகைகள் சந்திரன் ஆகாயத்தின்கண் வந்து சஞ்சரிக்கச் சிந்திய நீரருவியானதொழுக, உயர்ந்த பெரிய கொடிகள் அவ்விடத்தில் நீண்டு அசையும் பக்கங்களிலெல்லாம் ஒளியைச் செய்யும் விண்மீன் கூட்டங்கள் ஊர்கின்ற தோற்றமானது சிந்துகின்ற மூங்கின் முத்துக்கள் மலையின்கட் கிடந்து விளங்குமொளியைக் கக்குவதை யொத்துத் தோன்றும்.

(வி - ம்.) மாடங்களை மலையாகவும் கொடியை மூங்கிலாகவும் அதன் பக்கத்தூர்கின்ற விண்மீன்களை வேய்சொரியு முத்துக்களாகவும் கொள்க.

(113)

 வையக வரைப்பி னுயிரெலாங் கருமம்
           வளர்ப்பதற் கேதுவாய் வழங்கும்
 வெய்யவ னாதி கோளொடு நாளை
           விந்தநேர் தகைப்பது தகாதென்
 றையபொன் மணியிற் குயிற்றுநீண் மாடத்
           தவையெலாஞ் செல்லிய வழிகள்
 தெய்யநன் கமைத்த வுண்மைதேர் கல்லார்
           செறிந்தகா லதரென மொழிவார்.

(இ - ள்.) பூமியின்கண் உயிர்ப் பன்மைகளெல்லாம் காரியங்களைச் செய்தற்குக் காரணமாக இயங்கும் சூரியன் முதலாகிய கோள்களோடு விண்மீன்களையும் விந்தமலையை யொப்பத் தடுப்பது தகுதியுடையதன்றென்று கருதி அழகிய பொன்னாலும், மணியாலும், செய்யப்பெற்ற நீண்ட மாடங்களில் அக்கோள் முதலியவைகளெல்லாம் செல்லவழிகள் நன்றாக அமைக்கப்பெற்ற உண்மையை யறியாதவர்கள் (அவைகளை) சாளரமென்று சொல்லுவார்கள்.

(வி - ம்.) அந்தில் - அவ்விடம்; அசையெனினுமாம். கதிர்க்கும் - ஒளிமிகும். காட்சி - எழுவாய். வெய்யவனாதி கோளொடுநாள் - சூரியன் முதலாகிய கோள்கள் மீன்கள். தகைப்பது - தடுப்பது. ஐய - அழகிய. செல்லிய - செல்ல. தெய்ய - இசைநிறை. காலதர் - சாளரம். "மான்கட்காலதர்" எனச் சிலப்பதிகாரத்தும், "கால்போகுபெருவழி" என மணிமேகலையிலும் வருவனவற்றா லறிக. கோள்கள் செல்லும் வழியை யறியார் காற்றுச் செல்லும் வழியென்பார்.

(114)

வேறு

 பொன்ன ளாவிய மேனிலை மாடத்துப் புனைந்த
 நன்னர் மாலைதாழ் சுருங்கையி னாகத்து நாகம்
 முன்னு காலையி னெருங்குடன் மூடுரி கழற்றி
 மன்னு மோகையிற் றுளும்புறு மதிதொறு மன்னோ.

(இ - ள்.) பொன்னாற் கலந்து செய்யப்பெற்ற மேன்மாடங்களில் அலங்கரித்துச் செய்யப்பெற்ற நல்ல மாலைகள் தங்கப்பெற்ற சிறுவாயிலில்