பக்கம் எண் :

1494தணிகைப் புராணம்

(கு - ரை.) வீட்டி - அழித்து. அரில் - நெருக்கம், தூறு. நீலவெற்பு - தணிகைமலை. விளைநர் - விளைப்பவர். குமைத்தோர் - அழித்தோர்.

ஐம்புலன் எனும் வனத்தை வீட்டி ஐம்பொறி யெனும் புலன் முழுவதும் நவைகள் ஓட்டி இறையவன் அருளால் கூட்டும் ஆனந்தம் விளைநரன்றோ பகை குமைத்தோராவர் என்க. ஆவர் என்பது வருவித்து உரைக்கப்பட்டுள்ளது.

(30)

வேறு

 குமைத்தவைம் பொறியி னார்கள்
           குழாங்குழா மாகிநோற்கும்
 நமைத்தடம் பொழில்சூழ் நீல
           நளிர்வரை யமர்ந்த நம்ப
 கமைத்தலைச் செல்லா வின்னற்
           கருங்கட லழுந்தி னேனை
 இமைத்திடு மளவிற் காவா
           யெனிலுயிர் தரிக்கி லேனே.

(கு - ரை.) குழாம் குழாம் ஆகி - கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து. கமைத்தலைச் செல்லா - பொறுத்துக்கொள்ள முடியாத. இன்னற் கருங்கடல் - துன்பமாகிய பெரிய கடலில். இமைத்திடும் அளவில் - ஒரு நொடிப்பொழுதிற்குள். காவாய் - காத்தருளாய்.

குமைத்த ஐம்பொறியினோர்கள் நோற்கும் பொழில் சூழ்வரை அமர்ந்த நம்ப, இன்னற் கடல் அழுந்தினேனைக் காவாய் எனில் உயிர் தரிக்கிலேன் என்க. 'ஏ' : ஈற்றசை.

(31)

 தரிப்பதுன் சரணப் போது
           சாற்றுவ துனது நாமம்
 விரிப்பது னலகில் சீர்த்தி
           மேவுவ துனைப்பெற் றோரை
 அரிப்பதுன் னருளாற் பாச
           மாகநீ யருளிச் செய்யாய்
 தெரிப்பரும் பொருளே காவிச்
           செழுங்கிரி யமர்ந்த தேவே.

(கு - ரை.) தரிப்பது - தலையில் அணிந்துகொள்வது. சாற்றுவது - வாயால் சொல்லுவது. விரிப்பது - உலகில் பரவுமாறு செய்வது. மேவுவது - அடைவது. அரிப்பது - கெடுப்பது. தெரிப்ப அரும்பொருள் - இன்ன தன்மையன் என்று எடுத்து இயம்புதற்கு இயலாத பொருள்.