பக்கம் எண் :

திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி்1495

தரிப்பது சரணம், சாற்றுவது நாமம், விரிப்பது சீர்த்தி, மேவுவது பெற்றோரை, அரிப்பது பாசம் ஆகத் தேவே அருளிச் செய்யாய் என வேண்டிக் கொள்க. சீர்த்தி - மிக்க புகழ்.

(32)

 தேவரு மயனு மாலுஞ்
           சென்றுசென் றிறைஞ்சிப் போதும்
 பூவலர் பொழில்சூழ் காவிப்
           பொருப்பகம் பூத்த வள்ளல்
 யாவது நன்மை கல்லா
           விழுதையேற் குண்டாங் கொல்லோ
 தாவரும் பரமா னந்தத்
           தனிக்கட லழுந்து மாறே.

(கு - ரை.) சென்று சென்று - நாள்தோறும் தவறாது சென்று, இறைஞ்சிப் போதும் - வழிபாடு செய்து வருகின்ற. காவிப் பொருப்பகம் - திருத் தணிகை மலையில். 'பொருப்பகம்' என்பதில் 'அகம்' : ஏழனுருபு. நன்மையாவதும் கல்லா - நல்லனவற்றுள் ஒன்றும் அறியாத. இழுதையேற்கும் - பொய்யனாகிய எனக்கும். தா - குற்றம். 'அருமை' - இன்மை குறித்து நின்றது.

தேவரும் அயனும் மாலும் இறைஞ்சிப் போதும் பொருப்பகம் பூத்த வள்ளல், நன்மை கல்லா இழுதையேற்கும் ஆனந்தக் கடல் அழுந்தும் பேறு உண்டாங் கொல்? என்க. 'ஓ' அசை நிலை.

(33)

 மாறுகொண் டயலாற் கந்தோ
           வழுவறி தேற்றிச் சால
 வீறுதம் வழுக்கட் கின்மை
           விளம்புந ரிணக்கம் வல்லே
 நூறுமா கருணை காட்டி
           நுன்னடிக் கன்பு நல்காய்
 ஏறுசீர்த் தணிகை யோங்க
           லிருந்தருள் விமல வாழ்வே.

(கு - ரை.) மாறு - பகைமை. அயலாற்கு - பிறனொருவன் மீது; வழுவறிது ஏற்றி - தீமை ஒன்றும் செய்யாதிருக்கவும், செய்ததாகப் பொய்க் குற்றங்களை ஏற்றி. சாலவீறு தம் வழுக்கட்கு - மிகப் பெரிய குற்றங்களைத் தாம் செய்திருந்தும். இன்மை விளம்புநர் - செய்யவே இல்லை யென்று மறுத்துக் கூறுவோர். இணக்கம் - தொடர்பை. வல்லே நூறுமா - விரைவில் விட்டு நீங்குமாறு. ஓங்கல் - மலை.

'அயலாற்கு' : உருபு மயக்கம். 'நூறு மாறு' என்பது கடைக் குறைந்து 'நூறுமா' என நின்றது.